குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து நாட்டைச் சீர்குலைத்த யுகம் முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஒழுக்கமானதும் நாகரிகமானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை தற்போதைய அரசு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணியின் 76 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“கடந்த காலத்தில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. பல தசாப்தகால யுத்தத்துக்குப் பின்னர் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புதற்கான சிறந்த வாய்ப்பு எமக்குக் கிடைத்த போதிலும், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் திட்டமிடப்பட்ட முறையில் இனவாதமும் மதவாதமும் விதைக்கப்பட்டு, நாடு மீண்டும் பிரிவினைக்குள் தள்ளப்பட்டது.
எனினும், 2024 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்துக்குப் பின்னர் அவ்வாறான எந்தவொரு இன, மதவாத மோதல்களுக்கும் நாட்டில் இடமில்லை.
நாட்டின் பொருளாதாரம், ஒழுக்கம், சட்டம் மற்றும் நாகரிகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சகலரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழவேண்டும்.
சிங்களவர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் மனிதர்கள். எமக்கு மத்தியில் எந்தவொரு பாகுபாடும் இல்லை. நாம் அனைவரும் சாதி, மதம், மொழி அல்லது வேறு எந்தவொரு வேறுபாடுமின்றி ஒரே தாயின் பிள்ளைகள் போல ஒற்றுமையுடன் வாழவேண்டும்.” – என்று அமைச்சர் விஜித ஹேரத் அறைகூவல் விடுத்தார்.










