தேவையேற்படின் ஈரானுடன் மூன்றாவது முறையாக மோத நேரிடலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக The Times of Israel செய்தி வெளியிட்டுள்ளது.
Channel 14 ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலை மேற்கோள் காட்டி இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஹீப்ரு மொழியிலான அந்த நேர்காணலில், ஈரானுடன் இஸ்ரேல் மற்றொரு சுற்று சண்டையை எதிர்கொள்ள நேரிடுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் ஆட்சியில் இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களைச் சொந்தமாக்கிக் கொள்ளாது என்ற தனது உறுதிமொழியை நெதன்யாகு மீண்டும் வலியுறுத்தினார்.
“நான் பிரதமராக இருக்கும் வரை, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்காது,” என்று அவர் கூறினார்.
மேலும், காசா போரில் “முழுமையான வெற்றியை” (Total victory) அடைவோம் என்ற அவரது உறுதிமொழி இன்னும் நடைமுறையில் உள்ளதா என்று இஸ்ரேல் பிரதமரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “அது ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மத்திய கிழக்கிலோ அல்லது இந்த உலகத்திலோ வாழ விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும். நாம் மிகவும் பலமாகவே இருக்கிறோம். இஸ்ரேல் முன்னெப்போதையும் விட இப்போது வலிமையாக உள்ளது.
நாம் அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தி, (நமது எதிரிகளை) கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளோம். நாம் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் உள்ளன. ஈரானிய அச்சின் (Iranian axis) எஞ்சிய பகுதிகளை நாம் கவனிப்போம்,” என்று நெதன்யாகு கூறினார்.
இஸ்ரேல் “முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது” என்றும், அதன் எதிரிகளை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் கூறிய அவர், இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளதை ஒப்புக்கொண்டார்.
அதேவேளை,இஸ்ரேல் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயார் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் Israel Katz எச்சரிக்கை விடுத்துள்ளார்.
