பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று
இடம்பெற்றுள்ளது.
முப்படையினர், பொலிஸார், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காட்டுத்தீயைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இதற்கமைய தீ பரவும் அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அடுத்த வாரத்திற்குள் கிராமிய மட்டத்தில் ‘வன பாதுகாப்புக் குழுக்களை’ அமைத்தல்.
பாலர் பாடசாலைகள் முதல் மத வழிபாட்டுத் தலங்கள் வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, இருமொழித் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல்.
காட்டுத்தீயை ஏற்படுத்தும் சந்தேக நபர்களைக் கைது செய்ய, பொலிஸ் ரோந்துப் பணிகளை அதிகரித்தல்.
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான நிலங்களில் தீ பரவுவதைத் தடுப்பதற்கான விசேட பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுதல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காட்டுத்தீயை முற்றாகக் கட்டுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட மாவட்டச் செயலாளர், “எதிர்கால சந்ததியினருக்காக மத்திய மலைநாட்டு வன வளங்களைப் பாதுகாப்பது அனைவரினதும் கூட்டுப்பொறுப்பாகும்” என வலியுறுத்தினார்.
அதேவேளை, இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஊவா மாகாண தலைமைச் செயலாளர் அணுஷா கோகுல, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஏற்கனவே தேசிய நீர் வழங்கல் சபை போன்ற நிறுவனங்கள் , நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபையின் கீழுள்ள 28 கட்டமைப்புக்கள் ஊடாக இவ்வாறான அனர்த்தங்களுக்கு உடனடிப் பதிலளிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மாகாணத்தில் காட்டுத்தீயைத் தடுப்பதற்கான புதிய விசேட சுற்றறிக்கை ஒன்று மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
த.டிமேஷன்










