ஈரான் கடற்கரை மற்றும் கப்பல்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் அவிறிப்பால் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து உச்ச விலையை எட்டியது.
ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரை, துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் (terminals) ஆகியவற்றுடன், எந்தவொரு நாட்டின் கொடியினைக் கொண்ட கப்பல்களாக இருந்தாலும், அவை அனைத்தையும் உள்ளடக்கி, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையிடும் என்றும், இன்று செவ்வாய்க்கிழமை முதல் முற்றுகை ஆரம்பம் என்றும் வெளியான செய்தியைத் தொடர்ந்து, திங்கட்கிழமை எண்ணெய் விலைகள் 9% க்கும் அதிகமாக உயர்ந்து ஒரு மாத கால உச்சத்தில் நிலைபெற்றன. இது ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் (Brent crude) வர்த்தகம் பெரல் ஒன்றுக்கு $7.29 அல்லது 9.59% உயர்ந்து $83.30 ஆக நிலைபெற்றது. அதேநேரம், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் பெரல் ஒன்றுக்கு $6.73 அல்லது 9.42% உயர்ந்து $78.14 ஆக நிலைபெற்றது.
பிரெண்ட் மசகு எண்ணெய் வர்த்தகம் ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பிறகு அதன் மிகப்பெரிய ஒற்றை நாள் டொலர் உயர்வையும், ஜூன் 12 ஆம் திகதிக்குப் பிறகு மிக உயர்ந்த நிலைபெறலையும் பதிவு செய்தது. இதற்கிடையில், அமெரிக்க மசகு எண்ணெய் வர்த்தகம் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குப் பிறகு தனது மிகப்பெரிய தினசரி உயர்வை எட்டி, ஜூன் 15 ஆம் திகதிக்குப் பிறகு அதன் மிக உயர்ந்த மட்டத்தில் நிலைபெற்றது.
அமெரிக்க கடற்படை தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையத்தின் (Joint Maritime Information Center) படி, அமெரிக்கா ஜூலை 14 அன்று 2000 GMT நேரப்படி இந்த கடற்படை முற்றுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த முற்றுகை ஜூன் நடுப்பகுதியில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அன்றைய தினம், ஈரானுடன் மீண்டும் ஏற்பட்ட இராணுவ மோதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாகவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கும் 20% ஈடுசெய்யப்படும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
“ஈரானிய கடல்சார் போக்குவரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிபர் டிரம்ப் மீண்டும் விதித்துள்ளமை, அத்துடன் அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளமை ஆகியவை குறுகிய கால விநியோகக் கிடைக்கும் தன்மை குறித்த கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளன” என்று ‘கெல்பர் அண்ட் அசோசியேட்ஸ்’ (Gelber & Associates) ஆய்வாளர்கள் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும், தங்களின் அனுமதியின்றி அமெரிக்கா கடந்து செல்ல முயன்றால் அதை எதிர்கொள்வோம் என்றும் ஈரானின் உயர்மட்ட கூட்டு இராணுவக் கட்டளை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
டிரம்பின் இந்த முன்மொழிவுக்கு எதிராக ஐநாவின் கப்பல் போக்குவரத்து முகமை (UN’s shipping agency) கருத்துத் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் நீரிணைகளுக்கு எவ்வித கட்டணங்களையும் விதிப்பதை தாம் எதிர்ப்பதாகக் கூறியுள்ளது. மேலும், நீரிணைகளை கடந்து செல்வதற்கு கட்டாய சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
பெப்ரவரி பிற்பகுதியில் மோதல் தொடங்குவதற்கு முன்பு, உலகளாவிய நாளாந்த எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை ஹோர்முஸ் நீரிணை கையாண்டது.
ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தின் போது போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியிருந்தாலும், பதற்றங்கள் காரணமாக அது மீண்டும் மந்தமடைந்தது.
நீண்ட கால விநியோகத் தடைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதால், நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தேடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.










