போர் விரிவடையும் அபாயம்: ஈரான் வர்த்தக கப்பல்மீது உக்ரைன் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வர்த்தக கப்பலொன்றுமீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு மாலுமி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரான் கூறியுள்ளது.

உக்ரைன் போரின் தொடக்கம் முதலே, ரஷ்யாவால் பயன்படுத்தப்படும் ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை உக்ரைன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஈரான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் தன் நிபுணத்துவ உதவிகளையும் உக்ரைன் வழங்கி வந்தது.

தங்கள் கப்பல் மீதான தாக்குதலை ஒரு “அக்கிரமிப்பு நடவடிக்கை” என்று விவரித்த தெஹ்ரான், உக்ரைன் போரை விரிவுபடுத்த கிய்வ் முயல்வதாகக் குற்றம் சாட்டியதுடன், தனது தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்றும் கூறியது.

இந்த “பகைமை நிறைந்த மற்றும் குற்றகரமான” தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரியை (chargé d’affaires) ஈரானிய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்ததாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ (IRNA) தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தக் கண்டனம் வெளிவந்த அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தாக்குதல்களை நடத்த ஈரான் முயல்வதாகவும், அதற்கு உதவும் வகையில் ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தகவல்களை ஈரானுக்கு வழங்கி வருவதை உக்ரைன் கவனித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles