உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற FIFA அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோவின் (Gianni Infantino) முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, சர்வதேச கால்பந்து அமைப்புகளுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
FIFA வின் இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தைத் தொடர்ந்து, அது தொடர்பான மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் தரவுகள் எதையும் அழிக்காமல் பாதுகாக்குமாறு (Preservation Letter) ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான யுவேபா (UEFA), FIFA வுக்கு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இத்தகவலை UEFA அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
$4.2 பில்லியன் திட்டம் வாபஸ்
ஜோசுவா குஷ்னரின் (Joshua Kushner) நியூயார்க் முதலீட்டு நிறுவனம் உள்ளிட்ட தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 4.2 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டுவதற்காக ‘FIFA பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (FFE) என்ற ரகசியத் திட்டத்தை இன்பான்டினோ முன்னெடுத்திருந்தார்.
2038-ஆம் ஆண்டு வரையிலான FIFA வின் வணிக மற்றும் போட்டி உரிமைகளைத் தனியார் வசமாக்கும் இத்திட்டத்திற்கு உலகளவில் கடும் எதிர்ப்புப் கிளம்பியது.
குறிப்பாக, யுவேபாவின் 55 உறுப்பு நாடுகளும் இணைந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், FIFA வின் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரித்தன. இதனையடுத்து, கடும் எதிர்ப்பிற்குப் பணிந்த இன்பான்டினோ இத்திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
FIFAமீது வழக்குத் தொடரத் தயார்
நியூயார்க்கைச் சேர்ந்த ‘டெச்செர்ட்’ (Dechert) சட்ட நிறுவனம் மூலம் UEFA அனுப்பியுள்ள நோட்டீஸில்:
“இத்திட்டம் தொடர்பாக FIFAமீது சட்ட நடவடிக்கை, மத்தியஸ்தம் அல்லது ஒழுங்குமுறை புகார்களை அளிக்க UEFA தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. எனவே, இது தொடர்பான எந்தவொரு ஆவணங்களையும் அழிப்பதோ அல்லது மாற்றுவதோ சாட்சியங்களைச் சிதைக்கும் குற்றமாகப் பார்க்கப்படும்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸில் FIFA தலைவர் இன்பான்டினோ, தலைமை நிதி அதிகாரி தோமஸ் பேயர் (Thomas Peyer) உட்பட 18 உயர் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.










