நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பிற்பகல் நடைபெற்றது .
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய கூறியது:
“உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்குச் சட்டத்துறையினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணங்களை ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். எமது தூதுக்குழுவில் சுமார் 20 பேர் வரை கலந்துகொண்டனர்.
இவ்வாறானதொரு முக்கிய மாற்றத்தைச் செய்வதற்கு முன்னர், பரந்தளவிலான கலந்தாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
சட்டத்தரணிகள் மட்டுமன்றி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் இக்கலந்தாய்வு அமைய வேண்டும்.
அனைத்துத் தரப்பினரினதும் கருத்துக்களையும் உள்வாங்கி, இந்த உத்தேச முன்மொழிவு குறித்து மீண்டும் பரிசீலித்துச் சரியான முடிவை எட்ட முடியும் என நம்புகிறோம்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்காக நீண்டகாலமாகக் குரல்கொடுத்து வரும் ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவராக ஜனாதிபதி திகழ்வதால், தங்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அவர் கவனமாகப் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கிறோம்.” – என்றார் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்.
