அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்றும், அதனைத் தோற்கடிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான துமிந்த நாகமுவ இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்:
“அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே நமக்கு பாரிய சந்தேகம் இருந்தது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானது எனக் கருதி, நமது அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் இதனை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.
தற்போது சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் நடத்தப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, இது மிகவும் ஆபத்தானதொரு திருத்தச்சட்டமூலம் என்பது உறுதியாகியுள்ளது. எனவே, இதனை நிச்சயமாகத் தோற்கடிக்க வேண்டும்.
நாட்டில் உள்ள ஏனைய துறைகளில் பணியாற்றுபவர்களின் பதவிக் காலத்தைச் சட்டத் திருத்தங்களின் மூலம் நீடிக்க முடியும். ஆனால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான விதிமுறைகள் அரசியலமைப்பிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது மிகவும் முக்கியமான விடயம் என்பதாலேயே அரசியலமைப்பில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த 22ஆவது திருத்தச்சட்டமூலமானது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகும்; மேலும் இது லஞ்சம் கொடுப்பதற்கு இணையான ஒரு செயலாகும். எனவே, இதற்கு எதிராக நாம் தொடர்ந்து செயல்படுவோம்,” என்று துமிந்த நாகமுவ தெரிவித்தார்.










