அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய, திட்டமிடப்பட்டவாறு நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது போன்றே, இம்முறையும் சுமுகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக வருகை தரும் சட்டத்தரணிகளுடன் ஏனைய உறுப்பினர்களையும் இணைந்துகொள்ளச் செய்யுமாறு வலியுறுத்தினார்.










