நல்லதண்ணி – மோகினி எல்ல பகுதியில் நேற்றிரவு (11.30 மணியளவில்) கார் ஒன்று நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிளிநொச்சிப் பகுதியில் இருந்து நல்லதண்ணி பகுதிக்கு சுற்றுலா வந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தின் போது காரில் பயணித்த கிளிநொச்சி, வவுனியா மற்றும் நோட்டன் பகுதிகளைச் சேர்ந்த மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
எனினும், இந்த விபத்தினால் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
