உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைக் இலக்கு வைத்து ரஷ்யா இரவோடிரவாக நடத்திய விண்கணைத் (Missile) தாக்குதல்களில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த “பாரிய தாக்குதலில்” குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் பலத்த சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைகள் பிரிவு (DSNS) தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இத்தாக்குதலில் கிய்வ் நகரிலுள்ள சிறுவர் வைத்தியசாலை ஒன்றின் ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், அருகிலிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக கிய்வ் மேயர் விட்டாலி க்ளிட்ச்கோ (Vitali Klitschko) தெரிவித்துள்ளார்.
மேலும், நகரின் தென்மேற்குப் பகுதியிலுள்ள சொலொமியான்ஸ்கி (Solomyanskyi) தொழிற்பேட்டை மையமும் சேதமடைந்துள்ளது.
இத்தாக்குதல்களால் அப்பகுதியிலுள்ள மின் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. சீரமைப்புப் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நான்கரை ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் இந்தப் போரில், கிய்வ் நகரம் சமீபத்திய வாரங்களாகத் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதேவேளை, ரஷ்ய எல்லைப் பகுதிகளிலும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
