இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து திட்டங்களை வலுப்படுத்துவதற்கான தனது முழுமையான ஆதரவையும் பங்களிப்பையும் உலக உணவுத் திட்டம் (WFP) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுடன் அலரி மாளிகையில் இன்று (24) இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசாங்கத்துடனான தமது கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தயார் எனத் தெரிவித்த உலக உணவுத் திட்டப் பிரதிநிதிகள், பாடசாலை அமைப்பில் ஊட்டச்சத்து நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அமைச்சுக்கள், பல்கலைக்கழகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் சுட்டிக்காட்டினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாட்டின் ஊட்டச்சத்து நிலைமை ஒரு முக்கிய சவாலாக உள்ளதாகத் தெரிவித்ததோடு, ஆரம்ப மற்றும் தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் பாடசாலை ஊட்டச்சத்து திட்டம் ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், முன்பருவக் கல்வி மட்டத்திலும் ஊட்டச்சத்து நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொற்றா நோய்களின் (NCDs) அதிகரிப்பு குறித்து கவலை வெளியிட்ட பிரதமர், இலவச உணவுகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், ஊட்டச்சத்து விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் நீண்டகாலப் பழக்கவழக்க மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட உலக உணவுத் திட்டத்தின் உயர்மட்டக் குழுவினர், நம்பகமான ஆராய்ச்சிகள் மற்றும் அடிப்படை காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பான கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்த முக்கிய சந்திப்பில் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் நாட்டுப் பணிப்பாளருமான பிலிப் வோர்ட் (Philip Ward), பிரதி நாட்டுப் பணிப்பாளர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver), சிட்னி நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பேராசிரியை ஜெயஸ்ரீ ஆர்கொட் (Prof. Jayashree Arcot) மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
