தசாப்தங்களாகப் பல கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்த ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு’ என்ற நிலையிலிருந்து சிரியாவை அமெரிக்கா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) முறைப்படி நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீரடைந்து வருவதை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
அத்துடன், முன்னர் ‘அல்-நுஸ்ரா ப்ரண்ட்’ (al-Nusra Front) என்றும் பின்னர் ‘ஹயாத் தகரீர் அல்-ஷாம்’ (HTS) என்றும் அழைக்கப்பட்ட அமைப்பை, உலகளாவிய பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து அமெரிக்க வெளியுறவுத் துறை நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித் துறையும் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
13 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியா சீரமைக்கப்பட்டு வரும் சூழலில், எச்.டி.எஸ் (HTS) தலைவரான அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், 2024 டிசம்பரில் சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்து வந்த பாஷர் அல்-அசாத்தை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது அகமது அல்-ஷரா அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இது குறித்து அமெரிக்க நிதித் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய நடவடிக்கை சிரியாவில் கூடுதல் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியாவுக்கான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் வாக்குறுதிக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதித் துறை, அதேநேரத்தில் “உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும், சிரியாவில் உள்ள தவறான சக்திகளைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
சீரடையும் இரு தரப்பு உறவுகள்
முன்னர் அல்-காய்தாவின் சிரியாக் கிளையாகச் செயல்பட்டு வந்த அல்-நுஸ்ரா ஃப்ரண்ட், 2016-ஆம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்புடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.
சிரியாவை இப்பட்டியலில் இருந்து நீக்கும் தங்களின் விருப்பத்தை அமெரிக்கா முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது. இது அதிபர் ஷரா மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டது.
அரை நூற்றாண்டு காலமாக இரும்புக்கரங்கள் கொண்டு ஆட்சி செய்த அசாத் குடும்பத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தன்னை ஒரு ஒருங்கிணைக்கும் தலைவராகக் காட்டிக்கொள்ள முயலும் சிரிய அதிபரை, துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இப்பட்டியல் நீக்கமானது சிரிய மக்களுக்கு “வளத்திற்கான பாதையை” அமைத்துக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். “சிரியாவில் தனியார் துறை முதலீடுகளுக்கு இருந்த கடைசிப் பெரிய தடையையும் இந்நடவடிக்கை நீக்கியுள்ளது. இது சிரியாவின் பொருளாதார மீட்சிக்கும், உலகளாவிய பொருளாதாரத்துடன் அது மீண்டும் இணைவதற்கும் வழிவகுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடும் 10 ஆண்டுகால கொடூரப் போரினால் பொருளாதார ரீதியாகச் சீரழிந்துள்ள சிரியாவுக்கு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என டமாஸ்கஸிலுள்ள மூத்த அதிகாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனின் இந்த நடவடிக்கையை ஒரு “வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்” என்று வர்ணித்துள்ள சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானி, இது “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்குப் புதிய சிரிய அரசு கொடுத்துள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘சானா’ (SANA) வெளியிட்டுள்ள செய்தியின்படி, சிரிய நிதி அமைச்சர் முகமது பர்னியா இந்நடவடிக்கையை “சிரிய ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பில் சிரியா இணைவதற்கும், முதலீடுகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஈர்ப்பதற்கும், வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு கதவைத் திறந்துவிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
மத்திய வங்கியின் தலைவர் சஃப்பத் ரஸ்லான் இம்முடிவைப் பாராட்டியதோடு, “அபிவிருத்திகளுக்கேற்ப உருவாகக்கூடிய மற்றும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய நவீன மற்றும் நம்பிக்கையான நிதி அமைப்பை உருவாக்கத் தமது வங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது” என்று சேர்த்துக் கொண்டார்.










