இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நுவரெலியா கிரெகரி ஏரியின் நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாகவும், அந்த நீரை மனிதர்கள் அருந்துவது உடல்நலத்திற்கு பாரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆய்வுத் தரவுகளை மேற்கோள்காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த நிலைமை தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கிரெகரி ஏரிக்கு, சுற்றியுள்ள பல சிறிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வந்து சேரும் வகையில் ஆரம்பத்தில் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.
ஆனால் காலப்போக்கில் அந்த சிறிய நீர்த்தேக்கங்களில் சேறும் வண்டலும் தேங்கியதுடன், மலையக விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள், கழிவுகள் கிரெகரி ஏரிக்குள் கலந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏரி நீரின் இயல்பான இரசாயனத் தன்மை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றமடைந்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, நீரில் சாதாரணமாக சுமார் 0.20 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டிய பாஸ்பேட், கிரெகரி ஏரியில் 1.04 மில்லிகிராம் ஆக பதிவாகியுள்ளது. அதேபோன்று, சாதாரணமாக சுமார் 0.50 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டிய நைட்ரஜன் அளவு 3.70 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீரின் மாசுபாட்டை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய அளவுகோல்களில் ஒன்றான Biochemical Oxygen Demand (BOD) அளவு கிரெகரி ஏரியில் 9.72 மில்லிகிராம் ஆக பதிவாகியுள்ளது. இந்தத் தரவுகள் ஏரியின் நீர்தரத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலைமை மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்சினையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்த குழுவொன்றின் ஊடாக கிரெகரி ஏரியின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், நீர்தரத்தை மீட்டெடுப்பதற்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
