நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், எனவே, நாட்டில் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர் அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நேபாள-திபெத் எல்லையருகே நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு திரிசூலி நதியை மறித்ததால், அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இதேபோன்றதொரு பேரழிவை டித்வா புயலின் (Cyclone Ditwah) போது கண்டி – பேராதனை சரசவிகம பகுதியில் இலங்கை ஏற்கனவே சந்தித்திருப்பதாக பேராசிரியர் சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
அங்கு ஏற்பட்ட மண்சரிவினால் நீரோடை ஒன்று அடைபட்டு, வெள்ளநீர் அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் இடம்பெற்ற நிகழ்வும் இதுவும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என்றும், ஆனால் இலங்கையில் அதன் தாக்கம் சிறியளவில் இருந்தது என்றும் அவர் விவரித்தார்.
ஆறுகள் மற்றும் நீரோடைகளுக்கு அருகில் உள்ள சிதைந்த பாறைகள் மற்றும் தடிமனான மண் அடுக்குகள் சரிந்து விழும்போது, அந்த இடிபாடுகள் நீர் வழியை மறித்து தற்காலிக அணையை உருவாக்குகின்றன.
இதனால் அடைப்புக்கு பின்னால் நீர் தேங்கி, திடீரென அந்தத் தடை உடையும்போது எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அவர் விளக்கினார்.
இத்தகைய பேரழிவுகள் இலங்கைக்கு அல்லது நேபாளத்திற்கு மட்டுமே உரியவை அல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980களில் கொலம்பியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை மேற்கோள் காட்டினார்.
சரஸவிகம சம்பவத்தைப் போன்றதொரு சோக நிகழ்வு மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க, வழக்கமான மண்சரிவு அபாயப் பகுதிகளைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல், மண்சரிவால் ஆறுகள் மற்றும் நீரோடைகள் அடைபட வாய்ப்புள்ள இடங்களையும் அடையாளம் கண்டு வரைபடமாக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.










