நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன.
இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளத்தில் மற்ற அனைத்துக்கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறம் பூசப்பட்ட ஒரு வீடு மட்டும் சீறிப்பாய்ந்த சேற்று வெள்ளத்துக்கு நடுவே அசைக்க முடியாமல் நின்ற காட்சி இணையத்தில் தீயாகப் பரவியது.
வெள்ளத்தின் வேகம் சுற்றியிருந்த கட்டிடங்களைத் தரைமட்டமாக்கி அடித்துச் சென்ற போதிலும், அந்தப் பச்சை நிற வீடு மட்டும் வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கி உறுதியுடன் நின்றது. அந்த வீட்டுக்குள் ஒரு குடும்பமே சிக்கியிருந்தது தெரியவந்ததையடுத்து, உலகெங்கிலும் உள்ள சமூக வலைதளப் பயனாளர்கள் அவர்களின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
கட்டிடத்தின் அசாத்தியமான உறுதித்தன்மை இணையத்தில் பெரிய விவாதப் பொருளாக மாறியது. இவ்வளவு பெரிய வெள்ளத்தின் சீற்றத்தையும் தாங்கி இந்த வீடு எவ்வாறு சேதமடையாமல் நின்றது? எனப் பலரும் வியப்புத் தெரிவித்தனர்.
இதனிடையே, சமூக வலைதளப் பயனர் ஒருவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், வீட்டுக்குள் சிக்கியிருந்த குடும்பத்தினர் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.
கட்டுமான முறை
இமயமலைப் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான பாரம்பர்ய வீடுகள் செங்கல் அல்லது கற்களை மட்டுமே வைத்துக் கட்டப்பட்டிருக்கின்றன.
இவை மேலே இருந்து வரும் எடையைத் தாங்கும். ஆனால், பக்கவாட்டில் இருந்து பலமான விசை தாக்கும்போது சுவர்கள் எளிதாகப் பிளந்து கூரை உள்நோக்கி விழுந்துவிடும்.
ஆனால், இந்த வீடு வலுவூட்டப்பட்ட கான்கிரீட் சட்டகத்தைக் (Reinforced Concrete Frame) கொண்டு கட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான கம்பிகள் அதன் தூண்கள், விட்டங்கள் மற்றும் அடித்தளத்தை ஒரே வலுவான எலும்புக்கூடு போல ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்துள்ளன.
இதனால், சேற்று வெள்ளம் வந்தடித்தபோது, கான்கிரீட் சட்டகம் அந்த மோதல் விசையைத் தாங்கிக்கொண்டு, அதை அப்படியே தரையின் கீழ் கடத்திவிட்டது.
இரண்டாவது, வீட்டின் அமைவிடமும், வடிவமும் முக்கிய காரணங்களாகும்.
வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மிகப்பெரிய பாறைகள் அதன் மையப் பகுதியில்தான் அதிக வேகத்துடன் பாயும்.
இந்த வீடு அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி, கொஞ்சம் உயரமான இடத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் இதன் கச்சிதமான வடிவத்தால், வந்தடைந்த வெள்ளம் இரண்டாகப் பிரிந்து வீட்டின் இரு பக்கங்களிலும் விலகிச் சென்றிருக்கிறது.
அதுமட்டுமின்றி, முதலில் வந்து படிந்த சேறு ஒரு இயற்கைச் சரிவை உருவாக்கி, அதற்கு அடுத்து வந்த அதிவேக வெள்ள அலைகளை வீட்டின் மீது மோதவிடாமல் மேல்நோக்கி விலக்கிவிட்டுவிட்டது.”










