“2029-ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவே நாட்டின் ஜனாதிபதியாவார்; நான் ஒருபோதும் தமிழ் ஈழம் கேட்கப்போவதில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. மேலும் உரையாற்றுகையில்,
“ நாமல் ராஜபக்சவிடம், ‘2029-இல் நீங்கள் கட்டாயம் ஜனாதிபதியாவீர்கள்’ என்று கூறியுள்ளேன். அந்தச் சமயத்தில் உங்களுக்கு என்னை நினைவில்லாமல்கூட போகலாம்.
ஆனால், சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் இணைப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுத்தால், உங்களுக்குக் கார் சாரதியாக வரவும் நான் தயாராக உள்ளேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன்.
இந்நாட்டில் நான் மரணிக்கும் வரை தமிழ் ஈழம் வேண்டும் எனக் கோரப்போவதில்லை. தமிழ், சிங்கள மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எனது முதன்மையான எதிர்பார்ப்பு. நாட்டின் இனப்பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
எனது நாக்கு கறுப்பு நாக்கு; நான் சொன்னால் அது அப்படியே நடக்கும். 2020-இல் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாவார் என்று கூறினேன், அது நடந்தது.
அதன் பிறகு தமிழக முதல்வராக நடிகர் விஜய் வருவார் என்று கூறினேன், அதுவும் நடந்தது. அதுபோலவே, 2029-இல் நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாவது நிச்சயம்” என்று தெரிவித்தார்.










