உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலையை உடனடியாக உயர்த்தப்போவதில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை உயர்த்துவதா என்பது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் அறிவிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றமான சூழல், செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைகளுக்கு மத்தியில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளது.
பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 104.06 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இம்மாத இறுதியில் எரிபொருள் விலையில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும், சிபெட்கோ (Ceypetco) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ராஜகருண மேலும் தெரிவித்தார்.










