ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) “இணை உறுப்பினராக” மாறுவதற்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவைக் கனடாவின் பிரதமர் மார்க் காரினி வரவேற்றுள்ளார்.
ஐரோப்பாவும் கனடாவும் இணைந்து செயல்படும் போது மேலும் வலிமை பெறும் என்றும், மக்களின் செழிப்பைப் பாதுகாக்க இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும்,, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்த இந்த முன்மொழிவை வேடிக்கையானது என்று விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்திட்டம் பகைமை நடவடிக்கை எனக் கருதப்பட்டால் ஐரோப்பா மீது கூடுதல் வரிகளை (Tariffs) விதிக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனேடிய பிரதமர் மார்க் காரினி,
” ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாகப் பலம் வாய்ந்தவை; ஆனால், இரண்டும் இணையும் போது மேலும் வலிமை பெறுகின்றன.
வல்லரசுகளுக்குப் போட்டியாக மூன்றாவதாக ஒரு அமைப்பை உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த நாங்கள் அதிகாரம் கோரவில்லை.
மாறாக, நமது திறந்த சந்தைகள், இறையாண்மை, எல்லை பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை யாரும் அச்சுறுத்த முடியாத வகையில் பலப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்.
நாங்கள் சாதகமான சூழலில் மட்டும் கை கோர்க்கும் கூட்டாளிகள் அல்ல. நமது செழிப்பு பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்படும்போதே வளர்கிறது என நம்புகிறோம்.
சுயசார்பு அடைவது மட்டுமே எங்களின் நோக்கமல்ல, ஒட்டுமொத்தப் பாதுகாப்பே இலக்காகும்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்
முன்னதாக, வட கரோலினாவுக்குச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஐரோப்பிய ஒன்றியம் இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், அது பகைமை நடவடிக்கையாகக் கருதப்பட்டு ஐரோப்பா மீது மிகக் கடுமையான வரிகள் விதிக்கப்படும் அல்லது பல வர்த்தகங்கள் நிறுத்தப்படும்” என அச்சுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஓலோஃப் கில், “கனடாவுடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவது வேறு எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல; நமது பொதுவான பலத்திற்காக மட்டுமே” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.










