சர்வதேச சுயாதீன விசாரணைக்குழுவொன்றை அழைத்துவந்து, 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன, பிரதான சூத்திரதாரி யார் என்பது தொடர்பில் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சஹ்ரானை கைது செய்வதற்கு ரி.ஐ.டியின் பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த நாலக சில்வா தயாரானார். அப்போது அவருக்கு எதிராக திடீரென குற்றச்சாட்டு வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஷானி அபேசேகரவும் முடக்கப்பட்டார். எனவே, இதன் பின்னணியில் எதோ மர்மம் உள்ளது. விசாரணையை மறைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சாரா எங்கே? அவரை உடன் நாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
ஐ.எஸ். அமைப்புக்கு 2015 இல் ஒருவரே சென்றிருந்தார். சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ். அமைப்பு இருக்காது. இந்தியாவில் இருந்து ஒருவர் இயக்கி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஹக்கீம், ரிஷாட்டை விமர்சிப்பவர்கள், 20 இற்கு ஆதரவாக அவர்களின் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுகின்றனர். இதன்மூலம் அரசின் இரட்டை நிலைப்பாடு அம்பலமாகின்றது.
21/4 தாக்குதலை வைத்து இந்த அரசே நன்மை அடைந்தது. . தாக்குதலுக்கு அவர்களும் பொறுப்புக்கூறவேண்டும் . உண்மையை மூடிமறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே சுயாதீன சர்வதேச குழுவை அழைத்துவந்து இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோருகின்றோம்.” -என்றார்.










