பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

2015 ல் சம்பள உயவு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இ.தொ.கா முன்னாள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானால் தன்னிச்சையாக 1000 ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் சங்கக் கூட்டமைப்பும் கலந்தாலோசித்து இக்கோரிக்கையை ஆதரித்தன.

இக்காலத்தில் தேர்தல் சூடுபிடித்திருந்ததால் தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் 1000 ரூபா கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டினர். ஆனால் தேர்தல் முடிவடைந்தவுடன் அவர்கள் மெளனமாகி விட்டனர். தொழிற்சங்க பிரதிநிதிகளோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 1000 ரூபா வழங்க முடியாதென்பதே முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாடாக இருந்தது. இறுதியில் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும் ஏனைய கொடுப்பனவாக 50 ரூபாவாக மொத்தம் 750.00 ரூபா கிடைக்கப்பெற்றது.

இக்கோரிக்கைக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கருப்புப்பட்டி போராட்டங்கள், உண்ணாவிரதப் பேராட்டங்கள் தேசிய சர்வதேச ரீதியிலும் நடைபெற்றன. ஆயிரம் ரூபா இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது. 1000 ரூபா கொடுக்கா விட்டால் தோட்டங்களை அரசு சுவீகரிக்கும் எனவும் பயமுறுத்தப்பட்டது. தைப்பொங்கலுக்கு முன் கிடைக்கும், தீபாவளிக்கு முன் கிடைக்கும், கொரோனா காய்ச்சல் சுகமான பின் கிடைக்கும், தேர்தல் முடிவடைந்தவுடன் கிடைக்கும் என மாறிமாறி ஏதோதோ ஊடகங்களில் கூறிக்கொண்டே இருந்தனர்.

கடந்த வருடம் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தையில் 1000 ரூபா கோரியபோது இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தால் மாற்றுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால், அவர்களின் இந்த மாற்றுத்திட்டம் தொழிலாளர்களைப் படுகுழியில் தள்ளும் திட்டமாதலால் தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்டது. இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினாால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 1000 ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் பலமுறை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பிரதமர் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தினால் எவ்வித மாற்றமும் ஏறப்படாமையால் இதுகுறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டது.

அதன்பின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவும் பலமுறை முதலாளிமார் சம்மேளனத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததினால் சட்டத்தின் உதவியை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஏனெனில் ஆண்டாண்டு காலம் நட்டம் நட்டம் எனக்கூறிக் கொண்டே போனால் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எப்போது?

இதனால், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய ஒரே மார்க்கம், சம்பள சபைகள் கட்டளைச் சட்டம் என்பதால் 07.01.1944ல் அங்கீகரிக்கப்பட்ட தேயிலை வளர்த்தல் மற்றும் உற்பத்தித் தொழில் சம்பள நிர்ணய சபை, 22.10.1949ல் அங்கீகரிக்கப்பட்ட இறப்பர் நடுதல் மற்றும் பொது இறப்பர் உற்பத்தி கைத்தொழில் சம்பள நிர்ணய சபை ஆகிய இரண்டு சபைகளிலும் 1000 ரூபா வழங்க வேண்டுமென்ற பிரேரனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த இரண்டு சபைகளிலும் இவ்விடயங்கள் சம்பந்தமாக 08.02.2021ல் வாதவிவாதங்கள் நடைபெற்றன. அதன்பின் இறுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு தொழிலாளர் பிரதிநிதிகளுடன் 03 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்ததினால் 900 ரூபா குறைந்தபட்ச தினச் சம்பளமாகவும் 100 ரூபா வரவுசெலவு திட்ட சலுகைக் கொடுப்பனவாக தேயிலை இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதை தொழில் அமைச்சரின் அங்கீகாரத்துடன் 05.03.2021ல் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டதை தோட்ட நிர்வாகங்கள் 05.03.2021 முதல் அமுல்படுத்த வேண்டும். இதுபோன்ற விடயங்கள் கடந்த காலங்களிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, 1998ம் ஆண்டு நமது நாட்டின் தேசிய தினமான பெப்ரவரி மாதம் 4ம் திகதியை ஏனைய தொழிலாளர்களுக்கு விடுமுறை தினமாக அங்கீகரித்துள்ளதைப் போல் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அங்கீகரித்து விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்ற பிரேரணைக்கு 29.03.2000ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தொழிலாளர் பிரதிதிகளுடன் 03 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்ததால் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 01.08.2020 முதல் சம்பளத்தோடு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற அறிவித்தலின் பிரகாரம் சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படுகின்றன.

அதன்பின் சிறுதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் சம்பந்தமாக சிறுதோட்ட உரிமையாளர்களின் சார்பில் 50 ஏக்கருக்கு மேலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 95 ரூபாவும், 50 ஏக்கருக்கு குறைவாக உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 88 ரூபாவும், 50-25 ஏக்கருள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 83 ரூபாவும் வழங்க வேண்டுமென்ற பிரேரணை தேயிலை உற்பத்தியும் பதனிடல் சபையில் முன்வைக்கப்பட்டது. இப்பிரேரணை சம்பந்தமாக 22.07.1998ல் நடைபெற்ற தேயிலை வளர்த்தல், உற்பத்தி தொழில் சம்பள நிர்ணய சபையில் வாதவிவாதங்கள் நடைபெற்று இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 95 ரூபா வழங்கும் பிரேரணைக்கு தொழில்கொள்வோர் 04 பிரதிநிதிகளோடு 02 நியமன அங்கத்தவர்களும் வாக்களித்தனர் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

கூட்டு ஒப்பந்தமுறையை பலர் பலவிதமாக விமர்சனம் செய்ததோடு அதனை கிழித்தெறிய வேண்டும் எனக் கூறப்பட்டதுடன் பாராளுமன்றத்தின் மூலமாக சம்பள உயர்வை பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டன. வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 1000 ரூபா வழங்க சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றி விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வழங்க வேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளமுடியும். முதலாளிமார் சம்மேளனம் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல, தொழிலாளர்கள் நீண்டகாலமாக அனுபவித்த உரிமைகள் சலுகைகள் போன்றவைகள் தோட்டங்கள் கம்பனிமயமான பின் ஒவ்வொன்றாக ஒழித்து தற்போது கொழுந்து பறிப்பதும் அதை தூளாக்கி விற்பது மாத்திரமே செய்யப்படுகின்றன. ஆகக் குறைந்தது தொழிலாளர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்ட 500 கிறாம் தேயிலைத் தூள் வழங்குவதிலும் புதியமுறை மூலம் அதிகமானவர்களுக்கு கிடைப்பதில்லை. தோட்டங்கள் காடாகி காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகரிக்கின்றன. அதிகமான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றை நிர்வாகங்கள் கணக்கெடுப்பதும் இல்லை. இதேநிலை தொடர்ந்தால் தோட்டங்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் விலகிவிடுவதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

நமது மக்கள் பிரதிநிதிகள் வெறுமனே சம்பள விடயத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் தோட்ட மக்களின் மிகமுக்கிய தேவையான காணி உறுதியோடு வீடும் காணியும் பெற்றுக்கொடுக்க முன்வருவதுடன் தமிழ்மொழி பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான, கணிதபாட ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனையே பெருந்தோட்ட சமூகம் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

Related Articles

Latest Articles