” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலங்களில் மேதின நிகழ்வுகளை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளது. இந்நிகழ்வுகளில் பங்கேற்க பல இடங்களிலிருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்களை பெரும் எண்ணிக்கையானோர் தூர இடங்களிலிருந்து வருகை தருவார்கள். அதற்காக நாம் பாரிய அளவில் நிதியினை செலவிட்டுள்ளோம். எனவே, இனிவரும் காலங்களில் மேதினத்திற்காக செலவிடும் பணத்தினை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்று சமூக உட்கட்டமைப்புகள் வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (27) கொட்டகலையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கடந்த காலங்களில் எத்தனையோ மேதினங்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக பாரிய அளவில் நிதி செலவிடப்படுகின்றது. அவ்வாறான சூழ் நிலையில் இன்று எத்தனையோ தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்து பிள்ளைகள் கல்வியினை தொடர முடியாது உள்ளனர்.
பலர் பல்கலைக்கழகம் சென்று படிப்தற்கு வாய்ப்பிருந்தும் அதனை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் பொருளாதார கஸ்டங்கள் இருக்கும் போது நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஆகவே அவற்றிக்கு தீர்வு காண வேண்டும்.
ஆகவே கடந்த காலங்களைப்போல் அல்லாது உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனக்கு நீண்ட பயணம் ஒன்று செல்ல வேண்டியுள்ளது. அதற்காகத்தான் நீங்கள் எனக்கு அங்கிகாரம் கொடுத்துள்ளீர்கள். நிச்சயம் அதனை நான் செய்து முடிபேன். ” – என்றார்.










