மாகாணங்களுக்கு இடையில் மட்டப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு பயணிப்போர் தமது நிறுவன அடையாள அட்டை அல்லது பயணத்தை உறுதிப்படுத்துவதற்கான எழுத்துமூல ஆவணத்தை வைத்திருப்பது கட்டாயமானதாகும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆவணங்கள் வீதித் தடைகளில் பரிசோதிக்கப்படவுள்ளன.
குறித்த ஆவணங்களை கொண்டிராதவர்களை திருப்பி அனுப்புவதற்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
இதனிடையே, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக இன்று (14) முதல் மேலதிகமாக 14 ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படுத்துவதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
