தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி., நாடு திரும்பிய நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு சென்று முக்கிய சந்திப்பில் பங்கேற்றுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை சந்தித்து கடந்தகால மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளார் எனவும் அந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இன்னும் ஒரிரு நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய திகாம்பரத்துக்கு நல்லாட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டது. 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் யானை சின்னத்தின்கீழ்தான் திகாம்பரம் போட்டியிட்டார். 2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கம் முற்போக்கு கூட்டணியாக யானை சின்னத்தின்கீழ்தான் களமிறங்கியது.
எனினும், 2020 ஜனாதிபதித் தேர்தலில் திகாம்பரம் சஜித்துக்கு ஆதரவு வழங்கினார். பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டார்.
தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்குள் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு குறிப்பாக மலையகத் தலைவர்களுக்கு உரிய இடமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஐ.தே.கவுடன் திகாம்பரம் பேச்சு நடத்தியுள்ளமை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.










