ஐந்து கிலோ அரிசியை கொடுத்து, அதிலும் அரசியல் நடத்துவதை மலையக அரசியல்வாதிகள் உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முழு உலக நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.எமது நாட்டிலும் பல்வேறு வகையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில் மலையகத்தில் மக்கள் வாழ்வாதார ரீதியில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தமது தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் ஐந்து கிலோ அரிசியை கொடுத்து விட்டு ஏனைய தொழிற்சங்கங்களை சாற்றி அரசியல் நடாத்துவது நாகரிமல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்குவதுதான் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை கொடுப்பது அவரவர் விருப்பம் இருப்பினும் அதன் மூலம் அரசியல் நடத்துவதை உடன் நிறுத்தி கொள்ள வேண்டும்.மக்களின் மனதை வென்று அவர்களோடு இணைந்து செயற்படுவதே சேவையாகும்.அதனை விடுத்து ஏனைய தொழிற்சங்க செயற்பாடுகளை குறைக்கூறி அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது நாகரிகமற்ற செயற்பாடாகும்.
மேலும் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட என்பீல்ட்,கெக்கஸ்வோல்ட்,பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயா,போடைஸ் மற்றும் பீரட் அகிய ஆபத்தான ஆறுகளை அகலப்படுத்துவது தொடர்பான பிரேரணை கடந்த காலங்களில் அம்பகமுவ அபிவிருத்தி குழு கூட்டத்தில் என்னால் முன்மொழியப்பட்டது.
அதிலும் உடனடியாக போடைஸ்,பீரட் பகுதியூடாக செல்லும் ஆற்றினை அகலப்படுத்துவது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட விடயத்தை அம்பகமுவ கோரளை அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனால், அபிவிருத்தி குழு கூட்டத்தில் அங்கிகரிக்கப்பட்டதோடு அம்பகமுவ பிரதேச செயலாளர் ஊடாக உரிய அமைச்சுக்களுக்கும் வேலைகளை முன்னெடுத்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது. இருந்தும் கொரோனா சூழ்நிலைக் காரணமாக அரசாங்க அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தாமதமாகவே இடம்பெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இவ்வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக தமது அமைச்சினூடாக ஆற்றினை அகலப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு உரிய அரசாங்க தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆகவே ஐந்து கிலோ அரிசியை தமது தொழிற்சங்க அங்கத்தவர்களுக்கு மாத்திரம் கொடுத்து விட்டு பீரட் பகுதி மக்களிடம் ஆற்றினை அகலப்படுத்தி தர அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடியதாக கூறுவது அப்பட்டமான பொய்யான தகவல் ஆகும் . எனவே இவ்வாறு அரசியல் நடாத்துவதை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அத்தோடு கடந்த நல்லாட்சி காலத்தில் அமைச்சரவை அந்தஸ்து உடைய அமைச்சு பொறுப்புக்களை வகித்த இவர்கள் இவ்விடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இப்போது வந்து அறிக்கை விடுவது நகைப்புக்குரிய விடயமாகும்.” – என்றார்.