‘மக்களை மரண பொறிக்குள் தள்ளுகிறது அரசு’ – அநுர சீற்றம்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மரணத்தின் பிடிக்குள் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மரண பொறிக்குள் மக்களை தள்ளுவதற்காகவே தனது அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்திவருகின்றார். கனவுலகில் வாழும் அவர், துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில்லை. தனக்கு தேவையானவற்றை செய்து மரணத்துடன் விளையாடுகின்றார் – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸ் தொற்றால் 9 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கும் நிலை காணப்படுகின்றது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் 5 வீதமானோர் மரணிக்கும் பயங்கரமான நிலைமையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறும், நாட்டை உடன் முடக்குமாறும் விசேட வைத்தியர்களும், துறைசார் நிபுணர்களும் வலியுறுத்திவருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனமும் மேற்படி பரிந்துரையை முன்வைத்துள்ளது. எனினும், துறைசார் நிபுணர்களின், வைத்தியர்களின் கருத்துகளை ஜனாதிபதி செவிமடுப்பதில்லை. சமூகத்தின் நிலைமை என்னவென்பது அவருக்கு தெரியாது. மாறாக அரச புலனாய்வுப் பிரிவால் வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்தே முடிவுகளை எடுக்கின்றார்.

நாட்டின் தற்போதைய நிலைமை என்ன, எதிர்காலத்தில் எவ்வாறானதொரு நிலைமை ஏற்படும், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக சரியான தகவல்கள், தரவுகள் அவசியம். ஆனால் அரசிடம் அவ்வாறு சரியான தகவல்கள் இல்லை. மாற்றப்பட்ட – திரிவுபடுத்தப்பட்ட தரவுகளே உள்ளன என்பது உறுதியாகியுள்ளது.

அவற்றை வைத்துக்கொண்டு எவ்வாறு சரியான முடிவுகளை எடுப்பது? ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசு மரணத்துடன் விளையாடுகின்றது. அரசால் வெளியிடப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையில் நம்பிக்கை, நம்பகத்தன்மை இல்லை. சுகாதார தரப்புகள்கூட இதனை சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிச்சையாக செயற்படுகின்றார். கனவுலகில் வாழ்ந்துக்கொண்டு முடிவுகளை எடுக்கின்றார். துணைக்கு இராணுவத் தளபதியை வைத்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் முடிவை ஆளுங்கட்சியில் உள்ளவர்கள்கூட இன்று ஏற்பதில்லை. ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் வாக்களித்தனர். ஆனால் எவரும் உயிரை எழுதிவைக்கவில்லை.

எனவே, மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரச பிரதான என்ற வகையில் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அந்த பொறுப்பை அவர் சரிவர நிறைவேற்ற வேண்டும். ஆனால் நாளாந்தம் நூற்றுக்கு மேற்பட்டோர் சாகும் நிலையிலும் ஜனாதிபதி மௌனம் காப்பதிலிருந்து அவரின் மனோநிலை எப்படிபட்டது என்பது தெளிவாகின்றது. அதாவது பிறரின் கருத்துக்கு செவிமடுக்க தான் தயாரில்லை, தன்னால் எடுக்கப்படுவதே முடிவு என்ற தொனியிலேயே அவர் செயற்படுகின்றார்.

அன்று ஹிட்லர் போரில்தோற்கும் தருவாயில், படைத்தளபதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனையை ஏற்கவில்லை. தனக்கு தேவையான செய்தியை மட்டுமே ஹிட்லர் எதிர்ப்பார்த்தார். தோல்வி குறித்து தகவல் தெரிவித்தால் தளபதிகளை விரட்டியடிப்பார். வெற்றி தொடர்பான தகவல் மட்டுமே அவருக்கு அவசியம். கோட்டாவும் அப்படிதான். இதனால் செயலணி கூட்டத்தில் எவரும் கதைப்பதில்லை.

20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக சர்வ பலத்தையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். மக்களை மரண பொறிக்குள் இருந்து காப்பாற்றுவதற்காக அவர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தவில்லை. மாறாக மக்களை மரண பொறிக்குள் தள்ளுகின்றார்.” இது மனிதப்படுகொலையாகும். இதற்கு அவர் பொறுப்புக்கூறியாக வேண்டும். – என்றார் அநுரகுமார திஸாநாயக்க.

Related Articles

Latest Articles