“ நாட்டை முடக்கினால்தான் மரண பொறிக்குள் இருந்து மக்களை மீட்கலாம் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது. சுகாதார துறையினர், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த கோரிக்கையையே விடுத்துவருகின்றனர்.
ஆனால் இக்கட்டான சூழ்நிலையில்கூட மக்களின் உயிரை பணயம் வைத்து பேரம் பேசி, கப்பம்கோரும் அராஜக அரசியலையே ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும் அத்தனை வாய்ப்புகளையும் அலட்சியமான முறையில் இந்த அரசாங்கம் கோட்டைவிட்டது. தனக்கு விசுவாசமான, ‘ஆமாம் சேர்’ போடும் சுகாதார மற்றும் இராணுவ அதிகாரிகளை வைத்துக்கொண்டு தகவல்களை திட்டமிட்ட அடிப்படையில் மறைத்தது. அதன் விளைவுகளே இன்று தாண்டவமாடுகின்றன.
தண்ணீரில் இருந்து கரைக்கு வந்த மீன் தண்ணீர்தேடி துடிப்பதுபோல, சுவாசிக்க முடியாமல் ஒட்சீசனுக்காக மக்கள் துடிதுடிக்கின்றனர். வீடுகளிலும், வீதிகளிலும் மக்கள் செத்துமடிகின்றனர். இதனை பார்த்து சுகாதார துறையினரும் உளரீதியில் பாதிக்கப்பட்டனர்.
நெருக்கடி நிலைமையை உணர்ந்ததால்தான் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்தனர். நாமும் வலியுறுத்தினோம். அரசாங்கத்திலுள்ள பங்காளிக்கட்சிகளும் கோரின. முடியாதகட்டத்தில் மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமதத் தலைவர்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால் தான்தோன்றித்தனமாக செயற்படும் இந்த அரசிலுள்ள அமைச்சர்கள் சிலரும், இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் இக்கட்டான சூழ்நிலையில்கூட நாட்டை முடக்குவதற்கு மக்களிடம் கப்பம் கோரினர். அரச அதிகாரிகள் தமது சம்பளத்தில் 50 வீதத்தை தியாகம் செய்ய வேண்டும், 14 நாட்களுக்குரிய சம்பளத்தை மட்டுமே பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிரிச ஜயக்கொடி ஊளையிடுகின்றார். மறுபுறத்தில் நாட்டை முடக்க வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிக்கை விடுக்கின்றார்.
மக்கள் செத்து மடிந்தாலும் பரவாயில்லை, தமக்கு பணம், பொருளாதாரம்தான் முக்கியம் என்ற மனோநிலையில் இருக்கும் இத்தகைய அரசியல்வாதிகளுக்கு மக்களின் உயிரின் பெறுமதி நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு மனித நேயம் இருந்திருந்தால் மக்களின் உயிரை பணயம் வைத்து கப்பம் கோரும் செயலில் இறங்கியிருக்கமாட்டார்கள்.
இறுதிவரை காத்திருந்து நிலைமை உச்சகட்டத்துக்கு வந்த பிறகே நாட்டை முடக்கியுள்ளனர். காலம் கடந்தாவது ஞானம் பிறந்துள்ளது. இதனை வரவேற்கின்றோம். விஞ்ஞானப்பூர்வமான முடக்கமே அவசியம். அதேபோல மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் நிச்சயம் வழங்கப்பட வேண்டும். கடந்தகாலங்களில்போன்று இழுத்தடிப்புகள், புறக்கணிப்புகள் இடம்பெறக்கூடாது. அதற்கான பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். மாறாக எதிரணி கோரியதால்தான் நாட்டை முடக்கினோம், நிவாரணம் இல்லை என மக்களை கைவிடக்கூடாது.
இக்காலப்பகுதிக்குள் தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.










