பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சம்பள கொடுப்பனவுகள், சீருடை கொடுப்பனவுகள், சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான இடமாற்ற முறைமை வகுக்கப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். , கேகாலை, அம்பாறை பொது வைத்தியசாலைகள் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.