” பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பாரமுகமாகவே, அதாவது மாற்றான்தாய் மனபான்மையுடனே செயற்பட்டு வருகின்றனர்.”
இவ்வாறு மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” இந்த பொருளாதார நெருக்கடியை சுமூகமான நிலைமைக்கு கொண்டு வர முடியாத இந்த அரசாங்கம் முதலில் வெளியேற வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இருந்து என்ன தான் பயன்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்போது தான் நாட்டில் பஞ்சம் தீர்க்க வழி பிறக்கும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூரத்தி செய்து தருவதாகவே வாக்குறுதி வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் மலையக தோட்ட தொழிலாளர்கள் இந்த வாக்குறுதிகளுக்கு அப்பால் மாற்றான்தாய் மனபான்மையுடன் பார்க்கப்படுகின்றார்கள். ” – என்றார்.
