“இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசு கருத்தில்கொள்ளவில்லை.”

– இவ்வாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய் ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனினும், எந்த நேரத்திலும் பேரழிவு நிலை உருவாகலாம்.
கிராமப்புறங்களில் கண்டறியப்பட்ட காய்ச்சல், பெரும்பாலும் கொரோனாப் பாதிப்புக்களாகவே அடையாளம்காணப்பட்டன.
இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசு கருத்தில்கொள்ளவில்லை.
எனவே, கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதால் பாடசாலைகளில் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
எந்தவொரு சுகாதார வழிகாட்டுதல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படாமல் பல சமூகக்கூட்டங்கள் இப்போது நடைபெறுகின்றன.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவினால், இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் மீது எமது தொழிற்சங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும்” – என்றார்.










