எதிர்வரும் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
” இந்நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்கு தேவைப்படுவது இப்பிரச்சினைகளுக்கான தீர்வேயாகும்.
இதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவதற்கு பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்காகவே கட்சித் தலைவர் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடியுள்ளனர். இப்பிரச்சினையை இரண்டு பகுதிகளின் கீழ் கலந்துரையாடலாம்.
முதலாவதாக, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அவர்கள் தொடர்பில் செய்யப்படும் விசாரணை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அதே போன்று காணி தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத் தேவையான ஏற்பாடு.
இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கமைய, காணாமல் போனோர் தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் எம்மால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச முடியும்.
உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் அச்சிடப்படும். அந்த அறிக்கையில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கையளிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிந்துரைகளையும் நாம் இதன்போது பரிசீலிப்போம்.” – என்றார்.
