புசல்லாவை, பெரட்டாசி இபோச பஸ் சேவையை உடன் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி இன்று (05.06.2023) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புசல்லாவை, கெமுனுபுர சந்தியில் இன்று முற்பகல் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தோட்ட மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
கடந்த மே 27 ஆம் திகதி இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை கம்பளை டிப்போ வழங்கியிருந்தது. பஸ் சேவை ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள்கூட இடம்பெற்றிருந்தன.
எனினும், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது அனுமதிக்க முடியாத செயல் என போராட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர். அத்துடன், தமது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
பெரட்டாசி வீதி ஊடாக பேரணியாக வந்த மக்கள், கெமுனுபுர சந்தியை வந்தடைந்த பின்னர் போராட்டத்தை முன்னெடுத்தனர். உடன் இபோச பஸ் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இடித்துரைத்தனர்.
