இலங்கைக்கான இந்திய தூதுவராக செயற்பட்ட கோபால் பாக்லே, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் அவர் ஆற்றி வந்த பணிகளில் இருந்து கடந்த 15 ஆம் திகதியுடன் அவர் விலகினார்.
தூதுவர் கோபால் பாக்லே 2020 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக தமது கடமைகளை பொறுப்பேற்று கடந்த இரண்டரை வருடங்களாக அந்த பதவியில் தொடர்ந்தார்.
இந்த காலப்பகுதியில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரியாக செயல்பட்ட அவர் இருநாட்டு கூட்டுறவில் பல ஒப்பிடமுடியாத மைல்கற்களை அடைய செயல்பட்டிருந்தார்.
இந்தியா-இலங்கை உறவுகளில் பல மகுட சாதனைகளை நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றியவராக உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இருந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்திருந்தார்.
கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள், திரவ மருத்துவகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதிலும் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சிறப்பான பணியை ஆற்றியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இந்த காலகட்டத்தில் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது. இதனை ஒருங்கிணைத்தில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஈடுபாடுகள் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பதவிக்காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.










