டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பிலுள்ள பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், பெலாரஸ், பொலிவியா, கியூபா, கசகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகான்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய 10 நட்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புதின் பங்கேற்பார் என அந்நாடு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், சீன ஜனாதிபதியின் வருகையையும் சீனா இன்று உறுதி செய்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி இன்று டெல்லி வந்தடைந்தார்.
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
மாநாட்டின் பாதுகாப்பிற்காக 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 4,800க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் முக்கியப் பகுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்புப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
