” போரை முடிவுக்கு கொண்டுவர பங்களிப்பு வழங்கினார் என்பதற்காக, எவரேனும் குற்றச்சாட்டின் ஈடுபட்டால் அதனை நியாயப்படுத்த முடியுமா? முடியாது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்.”
இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சுரேஷ் சலே, எனக்கு எதிராக இழிப்பீடுகோரி வழக்கு தொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தவேளை, அவர் என்னை சந்தித்தார்.
பாதர், உங்களை கஷ்டத்துக்குள் தள்ளுவதற்காக நான் இந்த வழக்கை தொடுக்கவில்லை. எனது பெயரை காக்கவே போட்டுள்ளேன். எம்மால் சமரசத்துக்கு வரமுடியும் எனக் கூறினார்.
சமரசத்துக்கு வருவதற்காக உங்கள் நிபந்தனை என்னவென நான் சுரேஷ் சலேவிடம் வினவினேன். பாதர் நீங்கள் விடுத்த அந்த அறிவிப்பில் இருந்து எனது பெயரை விலக்கிக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்ய முடியாது என நான் திட்டவட்டமாகக் கூறினேன். எனது அறிவிப்பு சரியானது என்பதில் நான் உறுதியாக நின்றேன். சமரசம் தேவை இல்லை, வழக்கை தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் கூறினேன்.
எனவே, இழப்பீட்டு வழக்கில் இருந்து என்னை பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.
வுpசாரணைகளில் வெளியான சாட்சிகளை அடிப்படையாகக்கொண்டே அவர் கைது செய்யப்பட்டிருக்கக்கூடும்.
அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சுரேஷ் சலே மட்டும் அல்ல பாதுகாப்பு தரப்பினர் எவரேனும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அதனை நாம் மதிக்கின்றோம். இதற்காக அவர்கள் தவறிழைத்திருந்தால் அதனை மூடி மறைக்க முடியாது.
படுகொலை செய்வதற்கு எந்தவொரு படையினருக்கும் உரிமை கிடையாது. குற்றச்செயல்களில் ஈடுபட, கொள்ளைகளில் ஈடபடவும் எந்தவொரு படையினருக்கும் உரிமை கிடையாது. எனவே, நாட்டுக்கான சேவை என்பது வேறு, குற்றச்செயல் என்பது வேறு. இவை இரண்டையும் நாம் பிரித்து பார்க்க வேண்டும்.
இதற்கமைய நாட்டுக்காக சேவை செய்திருந்தால் நாம் அதனை மதிப்போம். அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சித்திரவதை இடம்பெற்றுள்ளதா அல்லது இல்லையா என்பது நீதிமன்றம் ஊடாகவே தெரியவரவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைப்பு என்பது புதிய விடயம் அல்ல. இதற்கு முன்னரும் பலர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எனவே, தனி நபருக்காக சட்டத்தை மாற்றும் அணுகுமுறை பின்பற்றப்படக்கூடாது. விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்.
உங்கள் தாய் அல்லது தந்தையை படை வீரர் ஒருவர் கொன்றுவிட்டார். அவர் போரில் ஈடுபட்டவர், போரை முடிக்க பங்களிப்பு செய்ததால் விசாரணை தேவை இல்லை, தண்டனை தேவை இல்லை எனக் கூறமுடியுமா? எனவே, குற்றத்தின் முன் தகுதி, தராதரம் என்பது முக்கியம் அல்ல. விசாரணைக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது.’ – என்றார்.
