நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 905 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் கடந்த 24 நாள்களில் மட்டும் 25 ஆயிரத்து 530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு நோய்ப் பரவலைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்தில் 42 ஆயிரத்து 835 டெங்கு நோயாளர்களும், தென் மாகாணத்தில் 12 ஆயிரத்து 260 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.











