” சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களையும் அவர் அடியோடு நிராகரித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு ,
“தடுப்பு காவலில் இருக்கும் சந்தேக நபரொருவருக்கு வழங்கப்படும் அத்தனை உரிமைகளும் சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டது.
வாரந்தோறும் புதன்கிழமை சட்டத்தரணியை சந்திக்க முடியும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குடும்ப உறுப்பினர்களுடன் கதைக்க முடியும்.
அதேபோல வாரந்தோறும் சனிக்கிழமை குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இவ்வாறு சந்தேக நபரொருவருக்கு வழங்கப்பட வேண்டிய அத்தனை அனுமதிகளும் வழங்கப்பட்டன.
எனினும், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் தகவல்களை மறைப்பதற்கு முற்படுகின்றார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்னரே, சுரேஷ் சலேவின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
உண்ணாவிராதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சில அரசியல்வாதிகள் சத்தியாக்கிரக மேடையில் கூச்சலிடுகின்றனர். அதற்கு நாம் அடிபணியமாட்டோம். விசாரணை தொடரும்.” என்றார் அமைச்சர் ஆனந்த விஜேபால.










