ஒழுங்காக நடந்துகொண்டால் ஈரானுக்கு நல்லது: ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் ராணுவ இலக்குகளைக் குறிவைத்து, புதன்கிழமை அமெரிக்க ராணுவம் ஒரு புதிய அலைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வான் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் (Air defences) எழுப்பப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மறுபுறம், இந்த மோதல்களுக்கு மத்தியிலும், 2024 டிசம்பரில் ஈரானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் டெனா கராரி (Dena Karari) விடுவிக்கப்பட்டதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

அவர் தற்போது பத்திரமாக ஈரானுக்கு வெளியே உள்ளதாகவும், இந்த நல்லெண்ண நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டுவதாகவும் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தத்திற்கு முரணாக, 5-வது நாளாகத் தொடரும் இந்த மோதலில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளைத் தான் தாக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) கூறுகையில், இந்த ஒப்பந்தத்தால் ஈரானுக்கு எந்தப் பயனும் இல்லை என்றால், அதைத் தாங்கள் பின்பற்ற “எந்தக் காரணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் காலக்கெடு விதிக்க விரும்பவில்லை, ஆனால் அவர்களுக்கு நிலைமை நன்றாகத் தெரியும்… அவர்கள் ஒழுங்காக நடப்பது அவர்களுக்கு நல்லது” என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தக்கவைப்பது தங்களின் தேசியப் பாதுகாப்பிற்கு முக்கியமானது என்று காலிபாஃப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடனான தங்களின் இந்த வாழ்வா-சாவா போராட்டத்தில் (Existential conflict), போரைப் போலவே பேச்சுவார்த்தையும் தங்களது எதிர்ப்பியக்க உத்தியின் ஒரு பகுதியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles