Home Blog Page 131

அரச அனுசரணையில் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கடும் ஆண்டாக 2026 அமையும்!

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்தங்களினால் சேதமடைந்த சுமார் 20,000 – 25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு, வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31,000 வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 50,000 – 55,000 வீடுகள் வரை நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ், அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M வேலைத்திட்டத்தை இன்று காலை(09) கல்நேவ பிரதேச செயலக பிரிவில் மல்பொலிகல பிரிவு, அலுபத்த கிராமத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை மீண்டும் நிர்மாணிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, அனர்த்தத்தினால் முற்றிலும் வீடுகளை இழந்து அதே இடத்தில் தங்கள் வீடுகளை மீண்டும் கட்டக்கூடிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னேவ, பலகல, பலுகஸ்வெவ, இபலோகம மற்றும் திரப்பனை பிரதேச செயலாளர் பிரிவுகளில் முற்றிலுமாக சேதமடைந்த 26 வீடுகளை புனரமைப்புக்கான இழப்பீடு வழங்கப்பட்டது.அத்தோடு புதிய வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இவ்வளவு பாரிய நஷ்டஈடு வழங்கி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்த அரசாங்கம் என்றும், அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த மக்களுக்கு அவர்கள் முன்பு இருந்ததை விடவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப உறுதியாக செயற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

அதேபோல், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டுமாயின், சிறந்த வருமானம், பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, ஒரு நல்ல வீடு மற்றும் மன அமைதி ஆகியவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த 5 விடயங்களையும் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் உறுதியளித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

“சுமார் 03 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மோசமான பொருளாதார அனுபவங்களுக்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. எரிபொருள், எரிவாயு இன்றி முழு நாடும் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்தப் பொருளாதார வீழ்ச்சி இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எமது நாட்டை நீண்டகாலமாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நாட்டின் பொதுமக்களின் செல்வத்தை ஒரு சிறிய குழுவினருக்குள் மையப்படுத்தியமை என்பனவே இதற்குக் காரணமாகும்.

திறைசேரியில் பெருமளவு பணம் சேகரிக்கப்பட்டாலும், மிகச் சிலருக்கு மத்தியில்தான் அந்தப் பணம் குவிந்திருந்தது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு இவையே காரணங்களாகும். இதன் விளைவாகவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மக்கள் வீதியில் இறங்கி, அதிகாரத்தில் இருந்த தலைவர்களை விரட்டியடித்தனர்.

நாம் ஒன்றிணைந்து ஓர் அரசாங்கத்தை உருவாக்கிய பின்னர் , வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது முதல் சவாலாக அமைந்தது. அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியை நாம் ஈட்டியுள்ளோம். எமது பெற்றோர்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை எமது பிள்ளைகள் எதிர்கொள்ளாத ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் அனுபவித்த துன்பங்களை எமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது. எனவே, எமது பிள்ளைகள் சிறப்பாக வாழ்வதற்கு ஏற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே எமது பொறுப்பாகும்.

நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதிலேயே நாட்டின் பல விடயங்கள் தங்கியுள்ளன. நாடு பொருளாதார ரீதியாக வலிமையாக இருந்தால் பல விடயங்கள் சீராகும். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் குற்றங்கள், ஊழல்கள் அதிகரித்து, சட்டத்தின் ஆட்சி சீர்குலையும். எனவே, பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதே மிக முக்கியமான விடயமாகும். அதற்காகவே நாம் படிப்படியாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வந்தோம்.

2025 ஆம் ஆண்டு, இலங்கையின் அனைத்துப் பொருளாதாரக் காரணிகளிலும் அதிக மதிப்பைச் சேர்த்த ஆண்டாக அமையும். அதிக அரச வருமானம், 1977-க்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை, அதிக ஏற்றுமதி வருமானம், வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடமிருந்து அதிகளவான பணம் வந்தடைந்தமை மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக இது மாறியுள்ளது.

இவ்வாறு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் நிலையிலே இந்த இயற்கை அனர்த்தத்திற்கு எமக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. இயற்கை அனர்த்தங்களை நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய பொருளாதாரத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் மீண்டெழுந்து கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது. உலக வங்கியின் ஆய்வின்படி, உட்கட்டமைப்பு சார்ந்த இழப்பு மட்டும் 4.1 பில்லியன் டொலர்கள் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மீண்டெழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்திற்கு இது ஒரு பெரும் தாக்கமாகும். ஆனாலும், அதற்காக அனர்த்தத்தைச் சந்தித்த மக்களைக் கைவிட அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களைக் காத்திருக்குமாறு கூறு முடியாது. எனவே, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒரு பாரிய திட்டத்தை அரசாங்கமென்ற வகையில் நாங்கள் முன்வைத்துள்ளோம்.

2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்த அனர்த்த பாதிப்பிலிருந்து மீள்வதற்காக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் மாதத்திற்காக 7,200 கோடி ரூபா ஒதுக்கியுள்ளோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.அதேவேளை பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நாம் நஷ்டஈடு வழங்கி வருகிறோம்.

விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத ஒரு நஷ்டஈட்டுத் தொகையை நாம் வழங்க இருக்கிறோம். கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கும் நாம் அந்த நிவாரணங்களை வழங்க உள்ளோம். மேலும் அடையாளம் காணப்பட்ட துறைகளின் தரவுகளை நாம் சேகரித்து வருகிறோம். நாம் மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்த அரசாங்கம். இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த ஆட்சியாளரும் இது போன்ற பாரிய இழப்பீடுகளை வழங்கி மக்களைப் பாதுகாக்கத் தலையீடு செய்யவில்லை.ஆனால் நாம் அதனைச் செய்து வருகிறோம்.”

வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். சுமார் 6,000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த சேதமும் இல்லாவிட்டாலும், சுமார் 17,000-18,000 வீடுகள் வசிக்கத் தகுதியற்றவை என அடையாளங்காணப்பட்டுள்ளது. எனவே, சுமார் 20,000-25,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியிருக்கும்.

அது மட்டுமல்லாமல், 2026 வரவு செலவுத்திட்டத்தில் மேலும் 31,000 வீடுகளை நிர்மாணிக்க நிதி ஒதுக்கியுள்ளோம். வீடுகளை நிர்மாணிக்க முடியாத மக்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், 10,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 2009 இல் யுத்தம் முடிவடைந்த போதிலும், இன்னும் மக்கள் அகதி முகாம்களில் வசிக்கின்றனர்.

அந்த மக்கள் 16 ஆண்டுகளாக வீடுகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். நாம் அந்த மக்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு 20 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கியுள்ளோம். மேலும், மலையக மக்களுக்கு வீடுகளைக் நிர்மாணிப்பதற்கு இந்திய உதவியின் கீழ் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு, 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டடிிருந்த சந்தர்ப்பத்திலேயே, இந்த அனர்த்தத்தினால் மேலும் 20,000-25,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது.

அந்த மக்கள் முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கையைப் பெறும் வகையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கவே நாம் செயற்பட்டு வருகிறோம். அதற்காகவே இந்தப் பணத்தை வழங்குகிறோம். எனவே, விரைவில் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நமக்கு பல அடிப்படைத் தேவைகள் உள்ளன. நமக்கு சிறந்த வருமானம் தேவை. நமது பிள்ளைகளுக்கு தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கை, நல்ல வீடு, உள நலம் ஆகியவை முக்கியமானவை. குறைந்தபட்சம் இந்த ஐந்து விடயங்களையாவது நிறைவேற்றாமல் வாழ்வது கடினமானது. எனவே, நமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதாகும்.

நீண்ட காலமாக, நம் நாட்டின் கல்வி முறையில் சிக்கல்கள் காணப்பட்டன. பெற்றோருக்கு சுமையாகவும், பிள்ளைகளுக்கு வேதனையாகவும் உள்ள ஒரு கல்வி முறையாக இது இருந்தது . கல்வி முறை சிறந்ததாக இருந்திருந்தால், நமக்கு சிறந்த பலன்கள் கிடைத்திருக்கும். கல்வியலாளர்கள் நீண்ட காலமாக இந்த கல்வி முறையில் புதிய மாற்றம் குறித்து கலந்துரையாடி வருகின்றனர். நாம் அந்தப் புதிய மாற்றத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் பல்வேறு அவதூறுகளையும் பொய்களையும் பரப்பி, ஆதாரமற்ற விடயங்களை கூறத் தொடங்கியுள்ளனர். பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே எமது நோக்கம். வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வழி பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதாகும். எனவே, நமது பிள்ளைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமான கல்வியை வழங்க வேண்டும். யார் எவ்வாறு அந்த வேறுபாடுகளை தடுக்க முயற்சித்தாலும், நாம் அந்த வேறுபாடுகளை உருவாக்குவோம்.

நாம் இந்த வீட்டுத் திட்டத்தை இன்று செயல்படுத்துகிறோம். 31,000 வீடுகளை நிர்மாணிக்க நாம் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தோம். இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுவதன் மூலம், அந்த எண்ணிக்கை 50,000 – 55,000 ஆக அதிகரிக்கும். அதன்படி, இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் ஒரு வருடத்தில் நிர்மாணிக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான வீடுகளாக இது அமையும். நமது நாட்டு மக்களுக்கு சிறந்ததொரு வீட்டை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை!

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேர்தலில் இடஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.

முகாமைத்துவ குழவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இரு தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்க வரவேண்டும்.

கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதில் பிரச்சினை கிடையாது. ஏனெனில் அவர்களுக்குதான் ஆதரவு தளம் அதிகமாக உள்ளது. இந்த உண்மையை ஏற்க வேண்டும்.

கூட்டணியின் தலைவராக சஜித்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவும் செயல்பட வேண்டும். கட்சி ஆதரவாளர்களின் மனநிலையை ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது புரிந்துகொண்டுள்ளார்.

16 ஆம் திகதி விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்: பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் தனது பதவிகாலத்தை நிறைவுசெய்துகொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அமெரிக்க தூதுவர் தாயகம் திரும்புகின்றார்.

இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளரை அவர் நேற்று பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்
.
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர்.

டித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தூதரின் சிறப்பான பங்களிப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.

அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் இதில் பங்கேற்றிருந்தார்.

‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்யவதாக தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜனவரி 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதித்ததால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.

தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும். இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர்.

சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது. இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் இன்றைக்கு (ஜன.9) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, நீதிபதி ஆஷா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், ஜனநாயகன் படத்தை வெளியிடும் வகையில் படத்துக்கு உடனடியாக U/A சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு மறு ஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவையும் ரத்து செய்தார்.

மேல்முறையீடு செய்ய கோரிக்கை: இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்ய தலைமை நீதிபதி முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதற்கு, மனுவாக தாக்கல் செய்யுங்கள், பிற்பகலில் விசாரிக்கிறேன் என தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை: விசாரணை முன்னெடுப்பு!

“ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள்மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும்.”

இவ்வாறு சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது கருத்து வெளியிட்ட ரவி கருணாநாயக்க எம்.பி.,

“ ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டு 17 வருடங்கள் கடந்துள்ளன. அவர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்படவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில்கூட பதில் வழங்கப்படுகின்றது. இது விடயத்தில் ஏன் இப்படி நடக்கின்றது.” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

“ ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் ஊடக நிறுவனங்கள்மீதூன தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி கொலையாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை கண்டறிவதற்கும், நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.” – என்றார்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ!

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் காட்டுத் தீ கொளுந்து விட்டெரிகின்றது.

வெப்ப அலை மற்றும் கடும் காற்று காரணமாக பேரிழிவு ஏற்படுமென அதிகாரிகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மற்றும் வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள பல நகரங்களிலும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

விக்டோரியா மாநிலத்தில் மூவர் காணாமல்போயுள்ளனர். இவர்களில் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் செயல்படுமாறு மக்களிடம் மாநில பிரீமியர் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழவதும் 30 இற்கு மேற்பட்ட பகுதிகளில் காட்டுத் தீ பரவிவருகின்றது.

அதேவேளை, அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் வெளியேற சொல்லும்பட்சத்தில் உடன் அதற்கமைய செயல்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் பேசியதாவது:

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசுலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு தொடா்ந்து ஏற்றுமதி செய்யும்.

இதனால் கிடைக்கும் வருவாய் வெனிசுலா பெயரில் அமெரிக்கக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இது வெனிசுலா மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

இதற்கிடையே, வெனிசுலா எண்ணெய் விற்பனையை அமெரிக்கா ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரோலின் லெவிட் தெரிவித்தாா்.

முன்னதாக, வெனிசுலா அமெரிக்காவுக்கு 3 முதல் 5 கோடி பேரல் எண்ணெய்யை வழங்கும் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதன் மதிப்பு சுமாா் 280 கோடி டாலா் (சுமாா் ரூ.25,172 கோடி) ஆகும். இதில் கிடைக்கும் வருவாய் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்று டிரம்ப் கூறினாா்.

இருந்தாலும், வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் இதற்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடா்பாக எந்த அறிக்கையையும் அவா் வெளியிடவில்லை.

இந்த நிலையிலும், வெனிசுலா எண்ணெய் துறையை அமெரிக்க நிறுவனங்கள் மறுகட்டமைப்பு செய்யும் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது. செவ்ரான், கானோகோபிலிப்ஸ், எக்ஸான் போன்ற நிறுவனங்களுடன் இதற்கான பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஆலோசிப்பதற்காக எரிசக்தி நிறுவனத் தலைவா்களை டிரம்ப் வெள்ளிக்கிழமை சந்திப்பாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

பிரதமரை பாதுகாப்போம்: நம்பிக்கையில்லாப் பிரேரணை வெத்து வேட்டு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நாம் பாதுகாப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டு அஞ்சவில்லை. அது தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அறிவித்தார்.

“ கல்வி மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், ஒரு தவறை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்பையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.

அரசியல் ரீதியில் எதிரணிகள் வங்குரோத்தடைந்துள்ளன. தமது இருப்புக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கின்றன. இதனை தோற்கடிப்பதற்குரிய இயலுமை அரசாங்கத்துக்கு உள்ளது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளவில்லை.

பிரதமரை நாம் பாதுகாப்போம். அவருக்கு ஆதரவாக அரசாங்கம் உள்ளது.” – என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் கூறினார்.

மரக்கறி விலைப்பட்டியல் (09.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி...

இந்திய துணை ஜனாதிபதி சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

0
டி.சந்ரு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு வந்த இந்திய துணை ஜனாதிபதியை, நுவரெலியா...

ராகலையில் மக்களை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!

0
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே Liddlesdale தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன், அதன்...