Home Blog Page 161

ஊழல், மோசடியற்ற தூய ஆட்சியே முன்னெடுப்பு!

“எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும். இந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிக்கு இடமே இல்லை.”

– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 2023/2024 கல்வியாண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அதியுயர் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கமைய, வடக்கு மாகாணத்தில் சாதனை படைத்த 274 மாணவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவிக் காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இந்த நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை ஊக்குவிப்பதும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய திறமைசாலி மாணவர்களுக்குக் கைகொடுப்பதுமே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும், பெருமளவான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்! தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்து

தாம் ஆட்சிப்பீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இது தொடர்பிலும் அதனை நடத்துவதற்கான அழுத்தங்களை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தில் வலியுறுத்துவதற்குத் தமிழ்த் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் நாளை செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும்போது அந்தக் கடிதத்தைக் கையளிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இக்கடிதத்தில் அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தளங்களிலும் இந்தியா பகிரங்கமாக வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அழுத்தத்தைத் தொடர்ந்து பிரயோகிக்குமாறு கோரவிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் அதிகாரப் பகிர்வானது அர்த்தமுள்ளதாக அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்தக் கடிதத்தில் உள்வாங்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக குறித்த தினத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 6 கட்சிகளின் தலைவர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஜெய்சங்கரின் இலங்கைக்கான திடீர் பயண ஒழுங்கின் காரணமாக அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

பேரழிவில் இருந்து ஜப்பான் மீண்டதுபோல இலங்கையும் மீண்டெழும்: அமைச்சர் நம்பிக்கை!

உலகப்போரின்போது ஜப்பான்மீது அணுகுண்டுவீசப்பட்டது. முற்றாக அழிந்த அந்நாடு மீண்டெழுந்தது. அவ்வாறான அணுகுமுறையை நாமும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

“ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன.

அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுனாமி காலத்தில் இருந்த அரசாங்கம்போன்றது அல்ல தற்போதைய அரசாங்கம். சர்வதேச நாடுகளுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நாட்டுக்காக உதவிகளை வழங்கிவருகின்றன. உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட பின்னர் அந்நாடு மீண்டெழுந்தது. மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர். நாமும் அவ்வாறு செயல்பட வேண்டும். எதிரணிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இலங்கை நிச்சயம் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது.” – எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.

உலகின் மிகப்பெரிய தங்க படிமம் கண்டுபிடிப்பு!

 

கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.

சீனா, உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

கடந்த, 2021ல் இருந்து தங்கப் படிமங்களை கண்டுபிடிப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், 14.44 லட்சம் கிலோ தங்க இருப்பு கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தவிர, ஜின்ஜியாங் உய்குர் பிராந்தியத்தில் உள்ள மலையில், 10 லட்சம் கிலோ தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷான்டாங் மாகாணத்தின் யாண்டாய் நகரில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அப்பால், கடலுக்கு அடியில் ஒரு பிரமாண்டமான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.

இது ஆசியாவின் கடலுக்கடியில் உள்ள மிகப்பெரிய தங்க இருப்பு என கூறப்படுகிறது. சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த தங்க இருப்பின் வாயிலாக லைஜோவின் ஒட்டுமொத்த தங்க இருப்பு 39 லட்சம் கிலோவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது சீனாவின் தேசிய தங்க இருப்பில் தோராயமாக 26 சதவீதமாகும்.

இந்த கண்டுபிடிப்பின் வாயிலாக லைஜோ பகுதி, சீனாவின் தங்க இருப்பு மற்றும் தங்க உற்பத்தி ஆகிய இரண்டிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

பதவிகளை விட்டு உடனே விலகுங்கள்!வடக்கு ஆளுநர் எச்சரிக்கை!!

“பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் துணிந்து, விரைந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். சப்பைக்கட்டு காரணங்களைச் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களால் முடிவெடுக்கவோ, செயலாற்றவோ முடியாது என்றால் பதவிகளை விட்டுத் தாராளமாகச் செல்லலாம்.”

– இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குக் காட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், அதிகாரிகளின் மந்தமான செயற்பாடுகள் குறித்துத் தனது கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

“கடந்த ஓராண்டாக நான் பல விடயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம். ஒரு தடவை சொன்னால் அதனைச் செய்து முடிக்க வேண்டும். உங்களது செயற்பாடுகளால் நான் விரக்தியடைந்திருக்கின்றேன்.

நான் எனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற உங்களுக்கு எதையும் கூறவில்லை. இந்த மாகாணத்தின் கல்வியை மேம்படுத்தவே பணிப்புரைகளை வழங்குகின்றேன். ஒரு சாதாரண இடமாற்றத்தைக் கூடச் செய்ய முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்றால் நீங்கள் ஏன் அந்தப் பதவிகளில் இருக்கிறீர்கள்?” – என்று ஆளுநர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “எல்லாவற்றுக்கும் மேலதிகாரிகளிடமே கேட்டுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, பொறுப்பான பதவியில் இருப்பவர்களுக்குத் துணிவு வேண்டும். அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இல்லாவிடின் பதவிகளை விட்டுச் செல்லுங்கள்.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வித் துறையில் பழிவாங்கும் நோக்கோடு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆளுநர், “இங்கே பழிவாங்குவதற்குத் தரும் முக்கியத்துவத்தை, பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள். பிள்ளைகள் கல்வியில் மேம்படுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதனாலும் வராது. அதற்குரிய திட்டங்களைத் தயாரியுங்கள். ஒவ்வொன்றையும் களத்துக்குச் சென்று ஆராயுங்கள்.” – என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.

ஜனவரியில் இந்தியா பறக்கிறார் ரில்வின் சில்வா!

ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும் ஜனவரி முற்பகுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதமே புதுடெல்லி செல்வதற்கு ரில்வின் சில்வா திட்டமிட்டிருந்தார். எனினும், டித்வா புயல் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் அவரது பயணம் பிற்போடப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி மாதம் செல்வதற்குரிய ஏற்பாடு இடம்பெறுகின்றது.

இவ்விஜயத்தின்போது இந்தியாவின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் பேச்சு நடத்துவார்.

 

மரக்கறி விலைப்பட்டியல் (201.12.2025)

மரக்கறி விலைப்பட்டியல் (21.12.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மலையக மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டாதீர்: முற்போக்கு கூட்டணிக்கு எச்சரிக்கை!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மும்மூர்த்திகளும் பிரிந்து இன்று நாசமா போகின்ற அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பேரிடரில் மலையகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை வடக்கில் குடியேற்றுமாறும், காணிகள் தருவதாகவும் வடக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் உறவுகள் என்னிடமும் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது சாத்தியதா, இல்லையா என்பது பற்றி ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும். இதற்கு காலம் அவசியம்.

இந்நிலையில் கண்டிக்கு சென்று மலையக மக்களை வடக்கில் குடியேற்றுவது பற்றி மனோ கணேசன் கதைக்கின்றார். ஆனால் மலையக மக்களுக்கு மலையகத்தில்தான் காணி வேண்டும், யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை என ராதாகிருஸ்ணன் குறிப்பிடுகின்றார்.

அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணியின் மும்மூர்த்திகளும் பிரிந்து இன்று நாசமா போகின்ற அரசியலையே முன்னெடுக்கின்றனர்.

தயவுசெய்து, மக்களுக்கு சித்து விளையாட்டு காட்ட வேண்டாம்.

மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இதனை நாம் செய்வோம். இந்த விடயத்தில் அரசியல் நடத்த வேண்டாம்.

சீனாவின் உயர்மட்ட தலைவரும் இலங்கை விஜயம்!

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுத் தலைவர் சாவோ லெஜி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சாவோ லெஜி மற்றும் அவரது குழுவினர் செவ்வாய்க்கிழமையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்திக்கவுள்ளனர்.

சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங்கிற்குப் பின்னர், சீன அரசாங்கத்தில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள, சாவோ லெஜியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அவர் இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கியிருப்பார்.

பேரிடருக்குப் பின்னரான உடனடித் தேவைகள் மற்றும் எதிர்கால சீன உதவி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்க தரப்புகளுடன் அவர் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கை வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? உலக வங்கியின் அறிக்கை நாளை கையளிப்பு!

டித்வா புயல் தாக்கத்தையடுத்து ஏற்பட்ட பேரிடரால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை நாளைதிங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

உலக வங்கியால் மேற்படி அறிக்கை கையளிக்கப்படும் .

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் மதிப்பீடு செய்து ஏற்பட்ட இழப்பு தொடர்பான அறிக்கையை வழங்குமாறு உலக வங்கியிடம் இலங்கை கோரி இருந்தது.

இதற்கான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளது.

அதேவேளை, முழுமையான சேதம் தொடர்பான துல்லியமான தகவல்களை பெறுவதற்குரிய மதிப்பீட்டு நடவடிக்கைக்கு 3 மாதங்கள்வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

டொரிங்டன் ஆறு பெருக்கெடுப்பு: ஆட்லோ தோட்டத்தில் 75 பேர் இடம்பெயர்வு

0
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (21) மாலை பெய்த இடியுடன் கூடிய கடும் மழையினால் ஆறுகள் பெருக்கெடுத்து, பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அக்கரப்பத்தனை...

லக்னோ, ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

0
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 32 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள Ekana கிரிக்கெட் மைதானத்தில்...

ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

0
ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி...