Home Blog Page 2677

இடிந்து விழுந்தது இரு மாடிக் கட்டிடம் – மயிரிழையில் உயிர்தப்பிய மூவர்! (படங்கள்)

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை எனும் இடத்தில் 2 மாடி வர்த்தக நிலையமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. அப்பகுதி தாழிறங்கும் அபாயம் இருப்பதால் ஒரு வழி போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தொலைவிலேயே அட்டபாகை அமைந்துள்ளது. அங்கு சிறிய நகரமொன்று உள்ளது. பிரதான வீதிக்கு அருகாமையிலேயே குறித்த வர்த்தக நிலையம் அமைந்திருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நேற்றிரவு மேற்படி வர்த்தக நிலையம் முற்றாக சரிந்து விழுந்துள்ளது. பொருட்கள் அனைத்து மண்ணுக்குள் புதையுண்டுள்ளன.

வர்த்தக நிலையத்தில் இருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு, உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்த தருணத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனால் மூவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உலகம் மற்றுமொரு நெருக்கடியை சந்திக்கலாம்: உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகம் முழுவதும் காணப்படும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக எதிர்வரும் காலத்தில் மேலும் ஒரு நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் நாடுகள் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஊசிகளை பயன்படுத்துவதன் காரணமாக பில்லியன் கணக்கில் பயன்படுத்தப்படும் ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கருதுகிறது.

இந்த வருட இறுதிக்குள் முழுமைப்படுத்த வேண்டிய தடுப்பூசி வழங்கும் இலக்கு தொடர்பில் இன்னும் உறுதியற்ற நிலைமை காணப்படுகிறது.

ஆபிரிக்க நாடுகளில் 5 நாடுகள் மாத்திரமே தமது சனத் தொகையில் 40 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்கும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

இதன் காரணமாக ஊசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இதனால், மருந்து ஊசிகளை தயாரிக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் ஆபிரிக்க பிராந்திய பணிப்பாளர் மருத்துவர் மட்ஷிடிசோ மோயேட் (Matshidiso Moide) தெரிவித்துள்ளார்.

உலகமும் முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க தற்போது 6.8 பில்லியன் ஊசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீர்வீழ்ச்சி பக்கம் செல்லவே வேண்டாம்! எச்சரிக்கை விடுப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் மத்திய மலைநாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகள் சீறிப்பாய்கின்றன.

அதிக மழை காரணமாக லக்ஸபான, எபடீன், மரே,காட்மோர்,மோஹினி எல்ல, டெவோன், சென் கிளையார் உள்ளிட்ட பிரதான நீர் வீழ்ச்சிகள் பொதுப்பொழிவு பெற்றுள்ளன.

 

இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற பெரிய சிறிய சகல நீர் வீழ்ச்சிகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

ஆகவே இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதனை தவிர்க்குமாறும் பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பஸிலை இந்திய வெளிவிவகார அமைச்சர் அவசரமாக தொடர்பு கொண்டது ஏன்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும், இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்குமிடையில் நேற்று தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பஸில் ராஜபக்ச நாளை முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்களில் பலகோணங்களில்
பேசப்படுகின்றது.

பஸில் ராஜபக்சவுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைக்கவும் – மேர்வின் வலியுறுத்து

” துட்டகைமுனு மன்னருக்கு பிறகு இந்நாட்டில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரிடம் 6 மாதங்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”- என்று முன்னாள் அமைச்சர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.

” மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கின்றேன். அவர் சிறந்த தலைவர். போரை முடித்தவர். பல அபிவிருத்திகளை செய்துள்ளார். ஆனால் தற்போதைய அரசின் செயற்பாடுகள் அவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பெயரளவில் மட்டுமே மஹிந்த பிரதமராக இருக்கின்றார். அவரிடம் நாட்டை 6 மாதங்களுக்கு ஒப்படைக்கவும். மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.

நான் இன்று மஹிந்த ராஜபக்சவுடன் இருந்திருந்தால் அவரை அழைத்துக்கொண்டு அரசிலிருந்து வெளியேறி இருப்பேன். மஹிந்தவை சூழ இன்று மோசடியான சிலரே உள்ளனர். அவர்கள் இருக்கும்வரை மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்.”- என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

விமல், கம்மன்பில, தயாசிறியை விளாசித்தள்ளும் மொட்டு கட்சி எம்.பி.

“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரச கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சித் தலைவர்கள் அமைச்சு பதவி உட்பட அனைத்து சலுகைகளையும், வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனாலும் அரசை விமர்சிக்கின்றனர். இவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் தயாசிறி ஜயசேகர உளறுகிறார். தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என திஸ்ஸ வித்தாரண வெளிப்படையாகவே கவலை வெளியிட்டுள்ளார். விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களும் இப்படிதான். தனிப்பட்ட தேவைகளுக்காகவே அவர்கள் அரசை விமர்சிக்கின்றனர்.

விமர்சிப்பதாக இருந்தால் வெளியே சென்று விமர்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இவ்வாறானவர்களை எமது கட்சி தலைவர்கள் வெளியேற்ற வேண்டும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.

சீமெந்து தட்டுப்பாடு டிசம்பர் நடுப்பகுதியில் நிவர்த்தியாகும் – இறக்குமதியாளர்கள்

நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிவர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளை ‘பட்ஜட்’ முன்வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாளை (12) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச, பிற்பகல் 2 மணிக்கு பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் 2 ஆவது பாதீடு இதுவாகும். அதேபோல நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் கன்னி வரவு – செலவுத் திட்டமும் இதுவாகும்.
சுதந்திரத்துக்கு பிறகு இலங்கையில் இதுவரை 75 வரவு – செலவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாளை முன்வைக்கப்படவுள்ள பாதீடானது 76 வரவு – செலவுத்திட்டமாகும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நிதி அமைச்சு பதவியை வகித்து, பட்ஜட் தாக்கல் செய்யும் முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். பஸில் ராஜபக்சவுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவே நிதி அமைச்சராக செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தகாலப்பகுதியில் நிதி அமைச்சும் அவர் வசமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக இதுவரை 11 வரவு – செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.

நாளை பட்ஜட் உரையின்போது பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், வரிக்கொள்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தமதுரையின்போது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்தவுள்ளார்.

கொரோனா தொற்று நிலையென்பதால் முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே பட்ஜட் தொடர் நடைபெறும். பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவரப்படுத்தப்பட்டுள்ளன.
12 ஆம் திகதி நிதி அமைச்சரின் உரை மட்டமே இடம்பெறும். நவம்பர் 13 ஆம் திகதி முதல் 2ஆம்வாசிப்புமீதான விவாதம் ஆரம்பாகும்.

இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 23ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும். (அமைச்சுகளுக்கான நிதி ஓதுக்கீடு). டிசம்பர் 10 ஆம் திகதி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். ஞாயிறு மற்றும் பௌர்ணமி விடுமுறை தினங்களைத்தவிர ஏனைய நாட்களில் சபை தொடர்ச்சியாகக் கூடும்.

2008 – நிதி அமைச்சர் மஹிந்த
2009 – நிதி அமைச்சர் மஹிந்த
2010 – பதில் நிதி அமைச்சர் சரத் அமுனுகம
2011 – நிதி அமைச்சர் மஹிந்த
2012 – நிதி அமைச்சர் மஹிந்த
2013 – நிதி அமைச்சர் மஹிந்த
2014 – நிதி அமைச்சர் மஹிந்த
2015 – நிதி அமைச்சர் மஹிந்த
2016 – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.
2017 – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க.
2018- நிதி அமைச்சர் மங்கள சமரவீர
2019 – நிதி அமைச்சர் மங்கள சமரவீர
2021- நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச.

-ஆர்.சனத்-

ஆஸி, பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை! வெற்றி எந்த அணிக்கு?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-வது அரைஇறுதியில் குரூப்-2-ல் முதலிடம் பிடித்த முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, குரூப்-1-ல் 2-வது இடம் பெற்ற ஆஸ்திரேலியாவுடன் துபாயில் இன்று (வியாழக்கிழமை) மோதுகிறது.

நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி பாகிஸ்தான். ‘சூப்பர்-12’ சுற்றில் தனது பிரிவில் 5 ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்று கம்பீரமாக முதலிடம் பிடித்தது. இதில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்ததும் அடங்கும்.

பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் குறிப்பிட்ட வீரரை சார்ந்து இருக்காமல் எல்லா வீரர்களும் அசத்துகிறார்கள். முந்தைய ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சோயிப் மாலிக் 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். முகமது ஹபீஸ், ஆசிப் அலி ஆகியோரும் ஓரிரு ஆட்டங்களில் கவனத்தை ஈர்த்தனர்.

எல்லாவற்றையும் விட கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தொடக்க வரிசையில் அமர்க்களப்படுத்துகிறார்கள். பாபர் அசாம் 4 அரைசதம் உள்பட 264 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 அரைசதம் உள்பட 214 ரன்களும் குவித்துள்ளனர்.

இதே போல் பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், இமாத் வாசிம் , ஷதப் கான் ஆகியோர் மிரட்டுகிறார்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் அமீரகத்தில் கடைசியாக விளையாடிய 16 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி தோற்றதில்லை. அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகி வருகிறது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது பிரிவில் 4 வெற்றி ( தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இங்கிலாந்துக்கு எதிராக) 2-வது இடம் பிடித்தது. இதில் வங்காளதேசத்தை 73 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 6.2 ஓவர்களில் எட்டியதால் ‘ரன்ரேட்’ அடிப்படையில் தென்ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி அரைஇறுதி அதிர்ஷ்டத்தை ஆஸ்திரேலியா பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சொதப்பிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முக்கியமான கட்டத்தில் பார்முக்கு வந்து விட்டார். 2 அரைசதம் உள்பட 187 ரன்கள் சேர்த்துள்ள அவர் அரைஇறுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோரும் நிலைத்து நின்று ஆடினால் தான் பாகிஸ்தானின் பவுலிங் வியூகத்தை உடைக்க முடியும். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா (11 விக்கெட்), ஹேசில்வுட் (8 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (7 விக்கெட்) உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி அந்த கனவை எட்டுவதற்கு இன்னும் இரண்டு தடையை கடக்க வேண்டி உள்ளது. இதில் முதல் தடையே அவர்களுக்கு யுத்தம் போல் இருக்கும் என்றால் மிகையல்ல.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி நல்ல பார்மில் உள்ளார். எனவே ‘பவர்-பிளே’யில் (முதல் 6 ஓவர்கள்) அவரை சமாளிப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் ‘பவர்-பிளே’யில் சிறப்பாக செயல்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை தொடரை பார்த்தாலே தெரியும்’ என்றார்.

20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 12-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். இரவில் பனியின் தாக்கம் காரணமாக பந்து வீசுவதற்கு கடினமாக இருக்கும். அதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்கையே விரும்பும். இந்த உலக கோப்பையில் துபாயில் நடந்துள்ள 11 ஆட்டங்களில் 10-ல் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று சிறுமிகளும் வீட்டைவிட்டு சென்றது ஏன்? வெளியானது தகவல்

முழு நாட்டினதும் கவனத்தைத் திருப்பிய (08) ஆம் திகதி காணாமல் போய் 09 ஆம் திகதி வீடுதிரும்பிய மூன்று சிறுமியரும் நடன நட்சத்திரங்களாகும் ஆசையில் வீட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளா் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகா் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாவது,

இந்த சிறுமியர் மூவரும் நடன நட்சத்திரங்களாகும் ஆசையில் பொழுது விடிவதற்கு முன்னரே வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா். இவர்களில் இருவர் கைகளிலிருந்து மோதிரங்களை அடகு வைத்து 60 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனா். அதன்பின்னர், தேவையான ஆடைகளையும் கொள்வனவு செய்துள்ளார்கள். எப்படியாவது நடனக்குழு அல்லது நடன வகுப்பில் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் ஆசையாக இருந்துள்ளது.

வத்தளை பிரதேசத்திலுள்ள நடன வகுப்பில் சேர்வதற்கும் இவர்கள் மூவரும் முயற்சித்து இருக்கிறார்கள். அந்த முயற்சி தோல்வியுற்றதால் அநுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ்ஸில் புறப்பட்ட அநுராதபுரம் சென்றுள்ளனர். அதன்போது குறித்த பஸ் நடத்துநர் இவர்கள் மூவரையும் சந்தேகித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் கொழும்பை வந்தடைந்த அவர்கள் எதிர்க் கட்சித் தலைவரைச் சந்திக்கவும் முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் இவர்கள் மூவர் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

சினிமா

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...

கமலின் படங்களுக்கு கர்நாடகாவில் தடை?

0
சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள...

செய்தி

வவுனியாவில் 10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவுடன் 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு

0
நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான...