Home Blog Page 4

23 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை சாதனை!

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது.

சபினா பூங்காவில் நடைபெறவிருந்த 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ரத்தானதை அடுத்து, தொடரின் முதல் போட்டியில் பெற்ற 41 ரன்கள் வித்தியாச வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது.

நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனினும், பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, 20 ஓவர்கள் கொண்ட சுருக்கப்பட்ட போட்டியைத் தொடங்குவதற்கான இறுதி நேரமான இரவு 8.02 மணிக்குள் ஆட்டத்தைத் தொடங்குவது சாத்தியமில்லை என அவர்கள் முடிவெடுத்தனர்.

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகள் மழையால் ரத்தானது இரு அணிகளின் முகாம்களிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த முடிவு வருகை தந்துள்ள இலங்கை சிங்கங்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்திய தீவு மண்ணில் இலங்கை அணி பெறும் முதல் ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும் (இதற்கு முன் 2003-ல் வென்றிருந்தது).

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கேரி கிர்ஸ்டன் மற்றும் புதிய ஒருநாள் போட்டி கேப்டன் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இது ஒரு சாதகமான தொடக்கமாக அமைந்தாலும், வீரர்கள் களத்தில் விளையாடுவதை மேலும் பார்க்க அவர்கள் விரும்பியிருப்பார்கள்.

“தொடரை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி, அந்த ஒரே ஒரு போட்டியில் மூன்று துறைகளிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம்,” என்று மெண்டிஸ் கூறினார்.

“அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக எங்களுக்கு அதிக போட்டிகள் இல்லை, கேப்டனாக எனது முதல் தொடர் வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நிர்வாகப் பணியாளர்களின் ஆதரவும் கிடைத்தது.” அத்துடன் அவர் தனது பந்துவீச்சுப் படையையும் பாராட்டினார்.

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரை, இந்த வானிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட தொடர் தோல்வியும் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஏமாற்றமளிக்கும் பின்னடைவாகும்.

முதல் போட்டியின் தோல்விக்கு பழிவாங்கக் கிடைத்த வாய்ப்பு பறிபோனது மட்டுமின்றி, மூன்று ஆண்டுகளில் சொந்த மண்ணில் அவர்கள் சந்திக்கும் முதல் தொடர் தோல்வியும் இதுவாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்குத் தேவையான முக்கியமான ஐசிசி (ICC) தரவரிசைப் புள்ளிகளைப் பெறும் அவர்களின் முயற்சிக்கு இந்த முடிவு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஒருநாள் தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்கிறது, இது நேரடியாகத் தகுதிபெறும் முதல் எட்டு இடங்களுக்கு வெளியேயாகும். அவர்கள் அடுத்து நியூசிலாந்து (உலக எண் 2) மற்றும் இந்தியா (எண் 1) அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளனர்.

வெவண்டன் தமிழ் வித்தியாலயத்திற்குப் பாதுகாப்பான இடத்தில் புதிய கட்டிடம் கோரி பெற்றோர் போராட்டம்!

 

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களால், றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திற்கு அருகில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த ‘திட்வா’ புயலின் போது ஏற்பட்ட மண்சரிவு அபாயம் காரணமாக, வெவண்டன் தோட்டம் மக்கள் வசிப்பதற்கு உகந்த பகுதியல்ல என மண் பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, வெவண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் தற்காலிகமாக றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது குறித்த மாணவர்களை றம்பொடை தொண்டமான் கலாச்சார மண்டபத்திலிருந்து நீக்கி, அருகில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கு அனுப்ப கொத்மலை கல்வி வலயம் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெற்றோர்கள், “தமது பிள்ளைகளைத் தூரத்திலுள்ள அயல் பாடசாலைகளுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்ப முடியாது” எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், தமது கிராமத்திற்கு அருகிலேயே பாதுகாப்பானதொரு இடத்தில் புதிய பாடசாலைக் கட்டிடத்தை அமைத்துத் தருமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன், பிரதேச செயலாளர் நதீர லக்மால் மற்றும் மண் பரிசோதனை அதிகாரி புத்திக பண்டார விஜயகோன் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்ட அதிகாரிகள், இப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். மேலும், இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றி உரிய கவனத்தை ஈர்க்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர இதன்போது தெரிவித்தார்.

சொல்லிசைப் பாடகரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவும்!

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை நான் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அவருடன் விரிவாகப் பேசியிருக்கின்றேன். இவரின் மறியல் விவகாரம் மற்றும் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்கனவே எழுத்து மூலமான அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

நாளை முதல் நான்கு நாள்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடக்கவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான நேரத்தையும் கோரியுள்ளோம். இந்தச் சந்திப்பின் போது, சங்கீத்ஷனின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் மிக முக்கியமாகப் பேசவுள்ளோம். பொதுமன்னிப்பின் அடிப்படையிலாவது அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக வலியுறுத்துவோம்.

சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் சாதாரண நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் மூலம் அவருக்குப் பிணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சட்டச் சூழல் நிலவுகின்றது. அவர் பிணையில் வெளிவர வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்றம் சென்றே அதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இது மிகவும் காலதாமதத்தை ஏற்படுத்தும்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் கருணையின் கீழ் சங்கீத்ஷனின் விடுதலை தொடர்பில் உடனடியாக இறுதி முடிவை மேற்கொள்ள முடியும். இதற்காகவே நான் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆகவே, அவரை விடுதலை செய்வதற்கான முழுமையான சட்ட முயற்சிகளையும் தற்போதைய அரசு முன்னெடுத்து, அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய சாரணர் பொசன் வலயக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை பொசன் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள தேசிய சாரணர் பொசன் வலயத்தை மிக விமர்சையாக நடத்துவது குறித்தும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டுடன், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரச துறையினரினதும், தனியார் துறையினரினதும் பங்களிப்புடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சாரண உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்த பொசன் வலயம் நடத்தப்படவுள்ளது.

லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் முதல் பொலிஸ் தலைமையக சந்தி வரையிலான பகுதியை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இப்பொசன் வலயத்தில், தோரணங்கள், விளக்குக் கூடுகள், மிகிந்தலை மாதிரிகள், பக்திப் பாடல்கள், தன்சல்கள் உள்ளிட்ட ஆன்மீக எழுச்சியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் பல நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, அரச நிறுவனங்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் டி. சி. ஜயதேவ, பௌத்த விவகார திணைக்களத்தின் ஆணையாளர் (தஹம் பாடசாலை) வசந்த குமார லியனகே, கொழும்பு மேலதிக மாவட்ட செயலாளர் எம். ஏ. எஸ். காஞ்சனா குணவர்தன, கொழும்பு பிரதேச செயலாளர் யூ. பி. எஸ். ஏ. பியதாச உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செம்மணியில் மேலும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன.

இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையிலான கால பகுதியில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது 318 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

302 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

புலமைப்பரிசில், A/L பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

………….

A/L EXAM

அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுரேஷ் சலேவுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறது மொட்டு கட்சி!

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“சுரேஷ் சலே என்பவர் தனது சொந்தத் திறமையினாலும், அர்ப்பணிப்பினாலும் இராணுவத்தில் ஜெனரல் பதவி வரை உயர்ந்த ஒரு தேசிய வீரன் ஆவார்.

அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு மூத்த இராணுவ அதிகாரி. தற்போதைய அரசியல்வாதிகளைப் போல மக்களுக்குப் பொய் கூறி, மக்களை ஏமாற்றிப் பதவிகளைப் பெற்றவர் அவர் அல்லர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் தலைமையின் கீழ், இந்நாட்டில் நிலவிய 30 ஆண்டுகால கொடூரமான பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர சுரேஷ் சலே போன்ற அதிகாரிகள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஆனால், இன்று அவர் ஈவிரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இதேபோன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிள்ளையான் (சிவநேசத்துரை சந்திரகாந்தன்) என்பவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கூறி கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இறுதியில், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் காணாமல்போன பழைய சம்பவம் ஒன்றைக் காட்டியே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டாரே தவிர, இன்று வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டோ அல்லது ஆதாரங்களோ முன்வைக்கப்படவில்லை. தற்போது சுரேஷ் சலேவும் அதே போன்றதொரு அரசியல் பழிவாங்கலுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறானது எனக் கூறிக்கொண்டே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது. இந்நாட்டில் நிலவிய எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே கடந்த காலத்தில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடுமையாகக் குரல் எழுப்பிய அநுரகுமார திஸாநாயக்க, இன்று தனது சொந்தக் கையொப்பத்தைப் பயன்படுத்தி, அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது நல்லாட்சி அரசின் போது, தேசிய பாதுகாப்பு முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருந்த ஒரு பின்னணியிலேயே அரங்கேறியது. அதுமட்டுமன்றி, உலகின் மிகப் பலத்த புலனாய்வு அமைப்பான அமெரிக்காவின் எப்.பி.ஐ. கூட இது ஒரு இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயல் என்பதைத் தனது விசாரணை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தச் சம்பவங்கள் நடைபெறும் காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையிலேயே இருக்கவில்லை. அவர் தூதரகப் பணிகளுக்காகவும் பயிற்சிகளுக்காகவும் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார். இலங்கை மண்ணிலேயே இல்லாத ஒரு அதிகாரியை, தற்போதைய ஜனாதிபதி தனது கையொப்பத்தைப் பயன்படுத்திச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதன் பின்னணியில் பாரிய சதி ஒளிந்துள்ளது.

தற்போதைய ஜே.வி.பி. அரசு ஆட்சிக்கு வருவதற்குப் புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ. டயஸ்போரா அமைப்புகளும், தீவிரவாதக் குழுக்களுமே ஆதரவு வழங்கின. அவர்களின் பிரதான நோக்கம் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை முழுமையாகச் சீர்குலைப்பதாகும்.

எதிர்காலத்தில் இந்நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதப் போராட்டம் உருவானால், அதற்கு எதிராக நாட்டை நேசித்து களமிறங்கக்கூடிய இராணுவ வீரர்களின் முதுகெலும்பை உடைப்பதே இந்த டயஸ்போரா அமைப்புகளின் தேவையாக உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தப் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைகளையே தற்போது நிறைவேற்றி வருகின்றார்.

கடந்த கால பயங்கரவாதப் போரின் போது தலதா மாளிகை, ஸ்ரீ மகா போதி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் அரந்தலாவ ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் பிக்குகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.

அன்று சுரேஷ் சலே போன்ற வீரர்கள் போராடியே இந்த நாட்டுக்கு அமைதியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் இன்று நாட்டைப் பாதுகாத்த வீரர்களைச் சிறையில் அடைத்து, பிரிவினைவாதிகளின் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்கின்றது.” – என்றார்.

ட்ரம்பின் கோரிக்கை ஏற்பு: தாக்குதலை நிறுத்தியது இஸ்ரேல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள இந்தத் தகவலின்படி, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால், பெய்ரூட் நகரின் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய முடிவை பிற சர்வதேச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிகிறது.

பிராந்திய பாதுகாப்பை நிலைநாட்டவும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும் இந்த தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு, சர்வதேச அரசியல் அழுத்தங்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதேவேளை, இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரானிய ராணுவம் தெரிவித்திருந்தது.

இருப்பினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

மலையக மக்கள் குறித்து திரைப்படம்! பிரதி அமைச்சர் பிரதீப்புடன் இயக்குனர் தங்கர்பச்சான் சந்திப்பு !

பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்றைய தினம் (08/06) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இவ் சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.

இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளிதார்.

பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம்!

ஹட்டன் விஞ்ஞான சமூக அமைப்பினரின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடத்தப்படும் உயிரியல் வினா விடைப் போட்டிகள் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைப்பெற்றது.

ஹற்றன், நுவரெலியா, கொத்மலை,வலப்பனை, நாவலப்பிட்டி கல்வி வலயங்களைச் சேர்ந்த 13 பாடசாலைகளிலிருந்து 500 இற்கும் மேற்பட்ட உயர்தர உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

இதில் தரம் 12 மற்றும் 13 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் எழுத்து மூல போட்டிப் பரீட்சையும், பாடசாலைகளுக்கிடையே ஓர் வினாவிடைப் போட்டியும் நடத்தப்பட்டன.

வினாவிடைப் போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினை பெற்றது. அனைத்து மாணவர்களும் பெற்றுக் கொண்ட மொத்த புள்ளிகளின் அடிப்படையில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இம் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் திருமதி.ரோஹிணி மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

சினிமா

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

செய்தி

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு!

0
“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...