Home Blog Page 46

சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த 25ஆம் திகதி காலை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக, அவரை 90 நாட்கள் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தொடரும்போது மேலும் முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்?

KANDY,SRI LANKA - FEBRUARY 27: Dasun Shanaka (R) of Sri Lanka during an ICC Men's T20 World Cup India & Sri Lanka 2026 net session at Pallekele International Cricket Stadium on February 27, 2026 in Mumbai, India. (Photo by Sameera Peiris-ICC/ICC via Getty Images)

டி20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.

இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கே முக்கியத்துவம் பெறுகின்றது.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

எனவே, இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, நிகர ஓட்ட விகிதத்தில் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும்.

பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் குறைந்தது 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடிக்க வேண்டும்.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது ‘தாய் கிழவி’ குறித்து ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பெண்மையின் சாரத்தையும் வலிமையையும் இவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக அனைவரது மனதையும் தொடும். ரொம்ப நன்றாக இருக்கிறது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இது உண்மையில் உங்கள் முதல் படமா? நமது சமூகத்துக்கு நீங்கள் என்ன ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்… இவ்வளவு கண்ணியமான நகைச்சுவை மற்றும் எளிமையுடன். உங்கள் கதையைப் பார்த்து ஒரு பெண்ணாக மிகவும் பெருமைப்படுகிறேன். உங்கள் சிந்தனை மற்றும் செயல்முறை உங்களது கதாபாத்திரத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

ராதிகா போன்ற ஒரு சக்திவாய்ந்த திறமையாளருக்கு அவர் உண்மையிலேயே தகுதியான மேடையை வழங்கியதற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. வயது தடையை மீறி ஒரு பெண்ணையும் அவரது திறமையையும் பற்றிய படத்தை உருவாக்கியதற்கு நடிகைகள் குழுவினர் சார்பாக நன்றி. பெண்களுக்கு இவ்வளவு முக்கியமான ஒரு படத்தை உங்கள் நட்சத்திர சக்தியுடன் ஆதரித்ததற்கு நன்றி.

நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள் ராதிகா சரத்குமார்! மிகவும் உத்வேகம் தருகிறீர்கள்! இந்த வேடத்தில் உடல் ரீதியாக எவ்வளவு கடின உழைத்துள்ளீர்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க இயலவில்லை.

’தாய் கிழவி’ வெறும் சக்தி வாய்ந்தவராகவும், புத்திசாலியாகவும் மட்டுமல்லாமல், மிகவும் அழகானவராகவும் இருந்தார், அவர் திரைக்கு வெளியே ராதிகாவின் பிரதிபலிப்பு. உங்கள் உடல் மொழி, ஸ்டைல், அப்பாவித்தனம், உங்கள் குரல் மாற்றம், உங்கள் சிரிப்பு, வசனம் மற்றும் உங்கள் சிறிய சைகைகள் மூலம் எங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டீர்கள்.

இது ஒரு நடிகராக உங்களை வேறுபடுத்துகிறது! எனக்கு ’தாய் கிழவி’ என்பது பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொழுதுபோக்கு படம் மட்டுமல்ல. இது சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம்” என்று தெரிவித்துள்ளார் ஜோதிகா.

மரக்கறி விலைப்பட்டியல் (28.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டதுடன், ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்புக்கும், அதன் மக்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது என்றும், அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக உணவுப் பாதுகாப்பிற்கான திட்டங்களைத் தயாரிக்கும் அதே வேளை, முறையான ஆய்வுக்குப் பிறகு புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளை அபிவிருத்தி செய்து அனுபவிக்கும் விவசாய சமூகம் உட்பட பொதுமக்கள், தமது காணிகளின் முழுமையான உரிமை இல்லாததால், சம்பந்தப்பட்ட காணியை மனிதத் தேவைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்துவதிலும், அந்த காணியை பொருளாதார அலகாக அபிவிருத்தி செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தன.

அதன்படி, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் நிபந்தனைகள் நீக்கப்பட்டு, அந்த கொடுப்பனவுப் பத்திரங்களுக்கு 1947 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் படி பூரண அளிப்புப் பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கத்திடம் தானாக முன்வந்து ஒப்படைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களுக்கு ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

இன்று (27) அநுராதபுர மாவட்டத்தில் 500 ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன், 50 பயனாளிகளுக்கு ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரங்களை ஜனாதிபதி அடையாள ரீதியில் வழங்கினார்.

மக்கள் புதிய உலகத்திற்குள் நுழையும்போது, ​​அவர்களின் காணிகளை கடுமையான சட்டங்களால் பிணைக்க வேண்டிய அவசியமில்லை என்று தனது அரசாங்கம் நம்புவதாகவும், எனவே, மக்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக பூரண அளிப்புப் பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த காணிகளைப் பாதுகாத்து, தமக்குப் பிறகு தமது பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்நிகழ்வில் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட “உறுமய” காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்தில் இருந்த சிக்கல்களைத் தீர்த்து, முறையான திட்டத்தின் கீழ் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எச்.எம். சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

மேலும், நாட்டில் காணி துஷ்பிரயோக கலாச்சாரத்தை தற்போதைய அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் பேசுகையில், அரசியல் நோக்கங்கள் இல்லாமல் மக்களுக்கு காணி உரிமையை வழங்க முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:

எமது நாட்டுக் கலாசாரம் மற்றும் பிணைப்புடன் பார்க்கையில் காணி என்பது சொத்து மாத்திரமல்ல. அது உறவு முறையாகும். எமது கலாசாரம் காணியுடன் பிணைந்துள்ளது. எமது நாட்டுப் பொருளாதாரம் விவசாயத்துடன் தொடர்புபட்டு இருப்பதால் காணி என்பது மிகவும் முக்கியமானது. தமக்கென ஒரு காணி இருப்பது தொடர்பில் அனைவருக்கும் கனவு உள்ளது.

காணி முகாமைத்துவத்தை தற்பொழுதாவது மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு மோதல்கள், சிக்கல்கள் எழும். பொருளாதாரம் முழுமையாக நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். எதிர்காலத்தில் தனித்தனியான வீடுகள் நிர்மாணிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. முழுமையான காணியும் வீட்டிற்காக பயன்படுத்தப்பட்டால் பொருளாதார மூலோபாயத்திற்கு காணிகள் எஞ்சாது.

காணிகள் தொடர்பில் விஞ்ஞான ரீதியாகவும் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் திட்டமிட்டு புதிய காணிப் பயன்பாட்டுக் கொள்கையொன்று உருவாக்குவது அவசியம். வரவு செலவுத் திட்டத்தில் காணி வங்கியொன்றை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணிகளுடன் பிணைந்த உறவு எமது பொருளாதாரத்தில் முக்கிய பங்குதாரராகும். பெருமளவான காணித்தகராறுகள் காணப்படுகின்றன.

காணிச் சட்டங்களில் சில சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு காணிகளை வழங்குகையில் சில நிபந்தனைகளை விதிப்பதில் தவறில்லை. அதனால் தான் இன்றும் கிராமங்களில் உள்ள காணிகள் சிக்கலான காணிச் சட்டங்களின் காரணமாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

சிக்கலான காணி உரித்துக்குப் பதிலாக பூரண அளிப்பு பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு வகையான பெயர்களில் காணி உறுதிகள் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் கைகளில் காணி இருக்க வேண்டும் என்பதற்காகவே கடுமையான காணிச் சட்டங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன.

தொடர்ந்தும் கடுமையான சட்டங்களில் ஊடாக மக்களின் காணி உரிமைகளை கட்டிப்போட வேண்டிய தேவை கிடையாது. அதனால் பூரண அளிப்புப் பத்திரம் வழங்க எமது அரசு முடிவு செய்துள்ளது. விற்கவோ வேறு நபருக்கு வழங்கவோ முடியாததால் முன்பு எமது காணிகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால் நாம் பூரண அளிப்புப் பத்திரம் வழங்கிய பின்னர் இவற்றை மேற்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடிகளின் போது அனைத்து தீர்வுகளும் கைகொடுக்காமல் போகும்போது கடைசியாக காணி விற்பனை தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்.

பூரண அளிப்புப் பத்திரம் ஊடாக உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் காணியை விற்க வேண்டாம். அதனை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அந்த மக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தந்த சமயங்களில் காணப்படும் பொருளாதார மூலோபாயங்களுக்கு அமையவே காணிப் பயன்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. உணவுப் பாதுகாப்பிற்காக விவசாயத்திற்கு காணிகளை பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் முக்கிய பங்காக உணவு பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு திட்டங்களைத் தயாரித்து வருகிறோம்.

முறையான ஆய்வின் பின் எமது காணிகளின் ஒரு பகுதியை புதிய பொருளாதார மூலோபாயங்களுக்கு அமைவாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளோம்.

அந்தந்த சமயங்களில் ஏற்படும் தொழில்நுட்பத்தை உள்வாங்குவதன் ஊடாகவே பல நாடுகள் அபிவிருத்தியில் வெற்றிகளை கண்டன. கைத்தொழில் ,அறிவியல் முன்னேற்றங்களுக்கு அமைவாக செயற்பட்டால் உலகில் காணப்படும் செல்வந்தர், ஏழை என்ற பாகுபாடு குறையும். 20 ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை எட்டிய போது அதற்கு அமைவாக பொருளாதாரத்தை மாற்றியமைக்க நாம் தவறினோம்.

புதிய பொருளாதார மூலோபாயங்களுக்கு அமைவாக குறிப்பிடத்தக்க அளவு காணிகளை பயன்படுத்த இருக்கிறோம். உலக தொழில்நுட்ப அறிவியலுடன் இணைந்த கைத்தொழில்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

முன்னர் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பெருமளவு காணிகள் கைப்பற்றப்படும் நிலை காணப்பட்டது. வழக்கு தொடர்பான சிக்கல்கள் இன்றி காணி உறுதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சியில் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மாணவர்கள், வர்த்தகர்கள் என அனைத்துத் துறையினரும் பாதிக்கபட்டனர். சிறந்த பொருளாதாரத்துடன் கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே மக்கள் எம்மை ஆட்சியில் அமர்த்தினார்கள். தற்போது பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டுள்ளது. 2025 வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையை 2.4 சதவீதமாக குறைக்க முடிந்தது. வட்டி வீதத்தை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. 2022 இல் அது 36 சதவீதம் வரை உயர்ந்தது. பண வீக்கத்தை 5 சதவீதத்தை விட குறைவாக பேண வேண்டும். நாம் அதனை 2.7 சதவீதமாக பேணி வருகிறோம். அரசின் வருமானத்தை 1996 இன் பின்னர் அதிகரிக்க முடிந்துள்ளது.

தற்போது பொருளாதார பயணம் சுமூகமாக அமைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வது தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பில் அவநம்பிக்கை இருக்கும் நாட்டில் எந்த முதலீட்டாளரும் முதலிட முன்வருவதில்லை. ஏப்ரலில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என முதலீட்டாளர்களை அச்சப்படவைக்க அரசியல்வாதிகள் முயல்கின்றனர். கடந்த வருடத்திலும் இவ்வாறு பல்வேறு மாதங்களை குறிப்பிட்டனர்.

பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பொருளாதர நன்மைகள் சென்றடைய வேண்டும். இந்த வருடம் 31 000 வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும். டித்வா சூறாவளி காரணமாக மேலும் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. 6000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 15 ஆயிரம் வீடுகள் மீளக் குடியேற உகந்தவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 51 ஆயிரம் வீடுகளை கட்ட வேண்டியுள்ளது.

பாதைகளை அமைப்பதற்காக மாகாண சபைகளுக்கு 15000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அதன் ஊடாக நிர்மாணிக்கப்படும். கிராமிய வீதிகளை நிர்மாணிக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 25 000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க இருக்கிறோம். அதில் அரசாங்கம் 4 சதவீத வட்டியை ஏற்கும். பல்வேறு வகைகளில் வீடுகள், பாதைகளை நிர்மாணிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வழங்க 96 000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். கிராமிய இளைஞர்களுக்கு தமது திட்டங்களை முன்வைத்து பணம் பெறலாம். வங்கிகளின் ஊடாக கைத்தொழில்களுக்கு கடன் வழங்க ஆலோசனை வழங்கியுள்ளோம்.

73 ஆயிரம் பேரை அரச சேவைக்கு உள்வாங்க அனுமதி கிடைத்துள்ளது. 23 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொலிஸிற்கு 10000 பேரை இணைத்துக்கொள்ள இருக்கிறோம். இந்த வகையில் பொருளாதார வெற்றியை கிராமங்கள் வரை விஸ்தரிக்க பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறோம்.

டித்வா சூறாவளியின் போது வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.
டித்வாவிற்காக மேலும் 50000 கோடி ரூபா ஒதுக்கினோம். இழப்பீடு வழங்கும் தொகைகளை அதிகரித்தோம். இதற்காக பணம் அச்சிட வில்லை. திறைசேரியில் இருக்கும் நிதியே பயன்படுத்தப்பட்டன. திறைசேரிக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பணத்தையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வறுமையை ஒழிக்க வேண்டும். வறுமை என்பது சமூக அவலமாகும். பொருளாதாரத்தின் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். இந்த வருட சம்பள அதிகரிப்பிற்கு 11 000 கோடி ஒதுக்கியுள்ளோம்.

இந்த சமூக அவல நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு. இந்த விடயத்தில் பூரண அளிப்புப் பத்திரம் வழங்குவதை ஒரு தனித்துவமான வாய்ப்பாகக் குறிப்பிடலாம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

புலி டயஸ்போராக்களுக்காகவே சுரேஷ் சலே கைது: விமல் குற்றச்சாட்டு!

“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயேதமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.”
என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச Wimal Weerawansa. தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே விமல் வீரவன்ச மேற்படி தகவலை வெளியிட்டார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

“அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சுரேஷ் சலே ஒருநாள் பாதுகாப்பு சபைக் கூட்டத்தின்போது முக்கிய தகவலொன்றை வெளியிடுவார்.

அடுத்த வாரம் விசேட இலக்கு இருப்பதாகவும், விமானப்படையின் தாக்குதல் விமானமொன்றை 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்குமாறு கூறி இருந்தார்.

இதற்கமையவே தமிழ்ச்செல்வன் இருந்த இடம்மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழ்ச் செல்வனுடன் இருக்கும் நபர் ஒருவர் ஊடாகவே அந்த உளவு தகவல் பெறப்பட்டிருக்கும்.

எனவே, தமிழ்ச் செல்வனுடன் இருந்தவருடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு இருந்தது என்பதற்காக அவரை புலியென கூற முடியுமா?

புலனாய்வு பிரிவு என்றால் அனைத்து தரப்புடனும் தொடர்பு இருக்கும்.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

2025-இல் 7,667 புலம்பெயர் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில், பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர் முயன்றவர்களில் 7ஆயிரத்து 667 பேர் உயிரிழந்ததோடு, பலர் மாயமாகியுள்ளதாக ஐ.நா.வின் சா்வதேச புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பூா்வ புலம்பெயர்வுக்கான வாய்ப்புகள் குறைந்ததால், மக்கள் ஆள்கடத்தல் கும்பல்களின் பிடியில் சிக்கி இத்தகைய ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, மத்திய தரைக்கடல் உள்பட அபாயகரமான கடல் வழித்தடங்களில் அதிக இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

2024-இல் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 200-ஆக இருந்த நிலையில், 2025-இல் அது 7 ஆயிரத்து 667-ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், இது முன்னேற்றத்தினால் ஏற்பட்ட குறைவு அல்ல என்றும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நிதி ஒதுக்கீடு குறைந்ததால் மீட்புப் பணிகள் மற்றும் தரவு சேகரிப்புப் பணிகள் முடங்கியதே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சங்கீதா, விஜயை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் குற்றம்சாட்டி சங்கீதா விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மக்கள் திரள்வு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராக மக்களின் கருத்துக்களைத் திரட்டி, நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை, பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தேவையற்றது என்றும் வலியுறுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களின் கையெழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் திரட்டப்பட்டு நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும், பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தபால் அட்டைகள் மூலம் தமது எதிர்ப்புக்களையும் கருத்துக்களையும் பதிவு செய்து வழங்கினர்.

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலி! – காலியில் சோகம்



காலி, பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பரப்பில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 29 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அனர்த்தம் நேரிட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 25 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரான 29 வயதுடையவரின் சடலத்தைத் தேடும் பணிகள் கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

பதிலடி பயங்கரமாக இருக்கும்: காலக்கெடு விதித்த ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!

0
உள்நாட்டு கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாகப் பயங்கரமான தாக்குதல்களை முன்னெடுப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்...