அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது!
“ஆபரேஷன் சிந்தூர் மூலம் அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ” – என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில்,
எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
“ பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை தொடங்கினர்.
மே 6 மற்றும் 7 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் திட்டமிட்டபடி இந்திய இராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களுக்குள் துல்லிய தாக்குதல்களை நடத்தி பழிதீர்த்தன.” – எனவும் மோடி குறிப்பிட்டார்.
அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. அத்துடன், பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களும் சொத்துகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இப்போது வரை அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டன. இது நடக்கும் என யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக நாம் செய்த தயாரிப்புகள் காரணமாகவே, நமது தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடந்தன. இல்லாவிட்டால், நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னிம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை அம்பலப்படுத்தின.”- என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.
பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் முடிவுக்கு நெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார்.
‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.” – என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?
ஆபத்தான பயணம்: என்று அமையும் பாலம்?
அம்பகமுவ பிரதேச சபை மற்றும் நாவலப்பிட்டி நகரசபைக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் இம்புல்பிட்டி , மெதகாவதுர பிரதேசத்துக்கு பெயிலி வீதியூடாக செல்லும் மகாவலி ஆற்றைக் கடக்கும் 150 மீற்றர் தூரம் கொண்ட பாலம் இன்னைமையால் அப்பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
அப்பிரதேசத்திலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து 5 நிமிடத்தில் நாவலப்பிட்டி பெயிலி வீதி ஊடாக பிரதான நகரை வந்தடைய முடியும்.
மகாவலி ஆற்றைக் கடக்க பல ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட பாலம் , வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையில் , நாவலப்பிட்டி நகரசபையால் ‘ஆட்டுப்பாலம்’ நிர்மாணிக்கப்பட்டது.
எனினும், வெள்ளம் காரணமாக அதுவும் சேதமடைந்தது.
எனவே தினமும் தொழில் நடவடிக்கைகளுக்காகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி தற்காலிகமாக மூங்கிலால் செய்யப்பட்ட படகு மூலமே தற்போது அப்பிரதேச மக்கள் ஆற்றை பாரிய ஆபத்திற்கு மத்தியில் தினமும் கடந்து வருகின்றனர்.
குறிப்பிட்ட பிரசே வாசிகளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மூக்கிலால் செய்யப்பட்ட படகில் 150 மீற்றர் ஆற்றைக் கடந்து பயணிக்க 20 ரூபா வரை கட்டணம் அறவிடப்படுகிறது.
வந்து செல்ல சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 40 ரூபா ஒருவருக்கு தேவைப்படுகின்றது. மாதமொன்றுக்கு 1200 ரூபா நபர் ஒருவருக்கு தேவைப்படகிறது. ஒரு குடும்பத்தில் சாதாரணமாக 4 பேர் பயணிப்பவர்கள் எனின் மாதமொன்றுக்கு 4800 ரூபா வரை ஆற்றைக் கடக்க செலவளிக்க வேண்டியுள்ளது.
மேலும் மழை காலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டால் ஆற்றைக் கடப்பது அபாயகரமாக பயணிக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வி. தீபன்ராஜ்
வடக்கு ஆளுநர், சுவிஸ் தூதுவர் சந்திப்பு: மாகாண தேர்தல் பற்றியும் அவதானம்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் , இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநரால், வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் வடக்கு மாகாணத்தில் போரின் பின்னர் தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லாமையால், வேலை வாய்ப்பு சவாலாக உள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தான விமான சேவைகள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்தார்.
கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்துக்கான நேரத்தை குறைக்கும் நோக்குடன், கட்டுநாயக்காக – பலாலி இடையேயான இணைப்பு விமானச் சேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
பொருளாதார மேம்பாட்டுக்காக முதலீடுகளின் அவசியத்தை தூதுவர் வலியுறுத்தினார்.
இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதன் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த காலங்களில் இங்கு நிலவிய இலஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக பெருமளவு முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்றதைக் குறிப்பிட்ட ஆளுநர் தற்போதைய சூழலில் பெருமளவு முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக முன்வருவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளமையை தெரியப்படுத்திய ஆளுநர், உலக வங்கியைக் கூட இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த அதிமேதகு ஜனாதிபதி பணித்துள்ளமையையும் குறிப்பிட்டார்.
ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்வதையும் சுட்டிக்காட்டினார். மேலும், கடந்த காலங்களைவிட வடக்கு மாகாணத்துக்கு மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளமையையும் ஆளுநர் தெரியப்படுத்தினார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், செம்மணிப்புதைகுழி விவகாரம், தையிட்டி திஸ்ஸவிகாரை விவகாரம், மீள்குடியமர்வு செயற்பாடு, சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.
மேலும், மாகாணசபைத் தேர்தல், மாகாணசபை முறைமை தொடர்பாகவும் ஆளுநரிடம், தூதுக் குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த காலங்களில் மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரிட்டன் அதிரடி அறிவிப்பு!
தமது சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.
‘ காசாவில் நிலவும் கொடுமையான நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உடனடி போர் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதிப்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.” – என்று பிரிட்டன் பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்தார்.
பாதுகாப்பான மற்றும் நிலையான இஸ்ரேல் மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனம் ஆகிய இரண்டையும் உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் அவர் கூறினார்.
உலகில் சில நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. எனினும், ஜி – 7 உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரான்ஸ் அறிவித்திருந்தது. இதனையடுத்தே பிரிட்டன் தரப்பில் இருந்தும் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பில் பரிசீலித்துவரும் ஆஸ்திரேலியா, அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
எனினும், பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள 14 நாடுகளால் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
ஆஸ்திரேலியா நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் எனவும், பாலஸ்தீன விவகாரத்தில் காலக்கெடு எதையும் விதிப்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லi எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
மரக்கறி விலைப்பட்டியல் (30.07.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…
ரஷ்யாவை உலுக்கிய பூகம்பம்: ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை!
ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
கம்சட்கா பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.
இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது.
தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் செய்தி முகமை உறுதி செய்துள்ளது. மக்கள் அடைக்கலம் தேடி வீதிகளில் குவிந்ததாக டாஸ் தெரிவித்துள்ளது. அங்கு மின்சார வசதி மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 7.4 ரிக்டர் அளவில் கம்சட்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 1952-ல் இந்த பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஹவாயில் 9.1 மீட்டர் அளவுக்கு சுனாமி பேரலைகள் எழுந்தன.
செம்மணி புதைகுழியை பார்வையிட்ட சுவிஸ் தூதுவர்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் செம்மணிப் புதைகுழியை நேற்று நேரில் பார்வையிட்டார்.
செம்மணி மனிதப் புதை குழியை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் மற்றும் சுவிஸ் தூதரக அரசியல் பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் நேற்றுக்காலை வருகைதந்து பார்வையிட்டனர்
.
சுமார் 45 நிமிடங்கள் வரை செம்மணிமனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை அவர்கள் பார்வையிட்டதோடு, அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் நிபுணர்களுடன் கலந்துரையாடினர்.
செம்மணியில் 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது புதிதாக ஏழு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின் போது ஏழு மனித என்புத் தொகுதிகள் புதிதாகஅடையாளம் காணப்பட்டன. 3 மனிதஎன்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்இதுவரை 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட் டுள்ளன.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக் குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிஞா. ரனிதா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலை மையிலான குழுவினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்களும் நேரு அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.