2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வெற்றி நாட்டின் “தங்கக் கனவை” நனவாக்கியுள்ளதாக ஜனாதிபதி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:
“பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் நாடு காணும் பொன்னான கனவை
நனவாக்கிய பெருமிதம்!
ருமேஷ் தரங்க உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் ஈட்டியை 89.75 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாம்பியன்ஷிப் சாதனையாக்கிய ருமேஷ் தரங்க, பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் தங்கம் வெல்வதற்காக இலங்கை 20 ஆண்டுகள் காத்திருந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பலர் களம் கண்ட மிகக் கடுமையான இப்போட்டியில், ருமேஷ் தரங்க இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். இது சமீபத்திய ஆண்டுகளில் இலங்கை தடகள விளையாட்டுத்துறை அடைந்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.










