காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘எல் நினோ-லா நினா’ (El Nino – La Nina) காலநிலைமை குறித்த சர்வதேச நிபுணர் குழுவினருடனான விசேட அமர்வு இன்று (18) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“சுற்றாடல் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். சமூக பங்கேற்பு, சமூக மையப்படுத்தப்பட்ட மற்றும் சமூகத் தலைமைத்துவத்துடனான சுற்றாடல் பாதுகாப்பு என்பது மிகவும் வெற்றிகரமான ஒரு திட்டமாக அமையும். காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், அவற்றின் மூலம் உருவாகும் சவால்களை எதிர்கொள்வதில் மனித செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால், அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்க வேண்டும்.
காலநிலை மாற்றம் பற்றிய விவாதங்களைத் தலைநகரத்தை மையமாகக் கொண்ட நாடாளுமன்ற விவாதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. அவற்றை கிராமப்புற மற்றும் ஏனைய நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிமட்ட அளவிலான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தக் கலந்துரையாடல்களையும் விழிப்புணர்வுகளையும் தலைநகரத்திற்கு வெளியே கிராமங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கொள்கை வகுப்பில் சாதாரண பொதுமக்களும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது பங்கேற்பு ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
அதேபோன்று, எல் நினோ-லா நினா நிலைமையால் கடுமையான குழப்பநிலை உருவாகிக் காணப்படுகிறது. இந்நிலைமை நமது நாடு, சுற்றாடல் கட்டமைப்பு, பல்லுயிர் பெருக்கம், தாவரங்கள் மற்றும் மரங்கள் மட்டுமன்றி, விலங்கினங்கள் மற்றும் மனித வளங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த பல விடயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அத்துடன், யானை-மனித மோதலைக் குறைத்தல் மற்றும் சிறுத்தைகளைப் பாதுகாத்தல் குறித்து இந்த நிபுணத்துவக் கலந்துரையாடலில் ஆரோக்கியமான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டதையிட்டுத் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து இணைத் தலைமைத்துவம் வழங்கும் பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம மற்றும் இத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியரான அஹிம்சா காம்போஸ்-அர்சிஸ் (Ahimsa Campos-Arceiz) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
