எதிரணிகளுக்குள் பிளவு: தேர்தலை தற்போது நடத்துவதே அரசுக்கு சாதகம்

எதிர்க்கட்சிகள் பல குழுக்களாகப் பிரிந்து காணாமல்போயுள்ளதால், தேர்தலை நடத்துவது தற்போதைய அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும் என்றும், இதனால் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்கிறது என எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“முன்னர் நடைமுறையில் இருந்த மாகாண சபை தேர்தல் முறையைக் கடந்தகால ஆட்சியாளர்களே இல்லாமல் செய்தனர். தற்போதைய நிலையில் புதிய தேர்தல் முறைமை ஒன்றும் வகுக்கப்படவில்லை. எனவே, புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்கி, மிக விரைவில் தேர்தலை நடத்துவதற்கு நாம் முயற்சித்து வருகின்றோம்.

பழைய தேர்தல் முறைமையை நீக்குவதாக இருந்தால், அதற்கு முன்னரே புதிய முறைமையொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததற்கு கடந்தகால ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும். தற்போதும் எல்லை நிர்ணயப் பணிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்.

உண்மையில், தேர்தலை நடத்துவதுதான் இந்த அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமானது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிளவுபட்டுள்ளன. ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே, தற்போது தேர்தலை நடத்துவதே எங்களுக்குக் கிடைத்துள்ள பெரும் வாய்ப்பாகும். ஆனால், அதனை உடனடியாக நடத்த முடியாமல் இருப்பது குறித்து நாங்களே கவலையடைகிறோம்” என்று அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles