நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவி வழங்க இலங்கையானது தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது ‘நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளப் பெருக்கினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள செய்தி அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்.
வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஒரு கொடிய சூறாவளியில் இருந்து மீண்டு வருமொரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம்.
நேபாள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் இலங்கையும் என்னுடன் இணைந்துகொள்கிறது’ என்றுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை
திபெத்தியப் பகுதியிலிருந்து ‘போதே கோஷி’ (Bhote Koshi) ஆற்று வழியாக நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்திற்குள் திடீரெனப் பாய்ந்த வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வாழும் இலங்கை மக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் டிமுரே (Timure) மற்றும் சியாப்ருபேசி (Syabrubesi) ஆகிய பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, ‘போதே கோஷி’ மற்றும் ‘திரிசூலி’ (Trishuli) ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளிலும் பெரும் அச்சம் நிலவுகிறது.
இதனையடுத்து ரசுவா, நுவாகோட், தாடிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட ஆற்றோரப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் ஆறுகள், ஆற்றங்கரைகள், பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், வெள்ள அபாயம் தணிந்து சாலைப் போக்குவரத்து பாதுகாப்பானது என உறுதிசெய்யப்படும் வரை தங்களது பயணங்களை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்கள், தூதரகத்தின் 24 மணி நேர அவசர உதவி எண்களான +977 9851048653 என்ற தொலைபேசி எண் அல்லது slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
