2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு

2030 இல் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் இலக்கு: 500 தேயிலை கிராமங்களை உருவாக்கவும் திட்டம்!

நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

“பெருந்தோட்ட அமைச்சு, தேயிலை சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், முதற்கட்டமாக 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 147 தேயிலை கிராமங்களில் இந்த ஆண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

2027 ஆம் ஆண்டில் 150 தேயிலை கிராமங்களும், 2028 இல் 150 கிராமங்களையும், 2029 ஆம் ஆண்டில் 56 தேயிலை கிராமங்களையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பசுந்தேயிலை விளைச்சலை அதிகரித்தல், சிறு தோட்ட உரிமையாளர்களின் வருமானத்தை மேம்படுத்தல், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தேயிலை பயிர்ச்செய்கையை சுற்றுலாவோடு ஒருங்கிணைத்தல் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும்.

நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் பெருமளவு அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு அங்கமாக, 2030 ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி மூலம் 2.5 பில்லியன் டொலர் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் வருமானமே கிடைக்கப்பெற்றது. அதேபோன்று தேயிலை உற்பத்தியையும் கணிசமாக அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” – என்றார்

Related Articles

Latest Articles