நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வாகன சாரதிகள் மாத்திரமலலாது சுயதொழில் முயற்சியாளர்கள் விவசாயிகள் உட்பட பலரும் தமது அன்றாட ஜீவன் அபாயத்தை முன்னெடுக்க முடியாத நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது எரிபொருள் நிலையங்களில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு செல்லும் பலரையும் காணக் கூடியதாகவும் உள்ளது.
அது மாத்திரமல்லாது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசதரப்பு வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருளை நிரப்பும் ஏனைய வாகனங்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
இவ்வாறான நிலையில் நாட்டில் எரிபொருள் கட்டுப்பாட்டினை துரிதகதியில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுக்க தவறும்பட்சத்தில் ஆட்சியினை செய்யக்கூடிய தரப்பினருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு தற்போதைய ஆட்சியாளர்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வரிசையில் இன்றைய தினம் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரில் எரிபொருள் கடடுப்பாட்டிற்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக தற்போது உலகில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற எச்சரிக்கையை கொடுப்பதை தவிர்த்து நாட்டு மக்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்..
நாட்டில் எரிபொருள் தேவையை சரியான வகையில் முகாமைத்துவம் செய்ய தெரியாத ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் எமக்கு தேவையில்லை என்ற கோஷத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.










